“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது” – அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் திட்டவட்டம் | TVK Government Won’t Allow Navodaya Schools in Tamil Nadu, Says Minister CTR Nirmal Kumar

Spread the love

Tamilnadu

oi-Vignesh Selvaraj

ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்விக் கொள்கையின் பாதையில் தொடர்ந்து தமிழக அரசு பயணிக்கும் என்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு எரிச்சக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதுகாப்பு வசதி, விடுதி வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்றவை வழங்க நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

TVK Government Won t Allow Navodaya Schools in Tamil Nadu Says Minister CTR Nirmal Kumar

நவோதயா பள்ளிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது. ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்விக் கொள்கையின் பாதையில் தொடர்ந்து தமிழக அரசு பயணிக்கும்” எனத் தெரிவித்தார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு எழுந்து வருவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “பல ஆண்டுகளாகவே அனைத்து வசதிகளுடன் கூடிய தலைமைச் செயலகம் தேவை என்ற கோரிக்கை நிலவி வருகிறது. சென்னை நகருக்குள் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் தலைமைச் செயலகம் அமைய இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

தொடர்ந்து மின்சார தட்டுப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மல் குமார், “காற்றாலை மின்சார உற்பத்தி எதிர்பாராத விதமாக குறைந்த காரணத்தாலும், கடும் கோடை வெப்பத்தாலும் மின்சார தேவை அதிகரித்தது. மின்சார தட்டுப்பாடு சில இடங்களில் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. மின்சார கட்டணம் உயர வாய்ப்பு இல்லை” என்றார்.

மேலும் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் , “ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல் மின் நிலைய பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகளுக்காக 6,000 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்ட நிலையில், 2021-இல் அனைத்து பணிகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எதற்காக தொடங்கினார்கள். எதற்காக நிறுத்தினார்கள் என்பது தெரியவில்லை. இந்த திட்டத்தை என்ன செய்யலாம் என ஆலோசிப்பதற்காக தற்போது நேரடியாக அங்கு ஆய்வு செய்ய இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *