India
oi-Nantha Kumar R
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் பணம் சம்பாதிப்பதற்காக மனைவி, மகள் என்று அனைவரையும் பாலியல் உறவில் தள்ளும் கொடுமை இன்று வரை நடந்து வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் தனது குடும்ப பெண்களுடன் உறவு வைக்க வெளி ஆட்களை சொந்த தந்தை, அண்ணனை அழைத்து வருவது தான். இந்த ஷாக் சம்பவம் நடக்கும் கிராமத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெரிய பெரிய நகரங்களில் ‘ரெட்லைட் ஏரியா’க்கள் தனியாக உள்ளன. இங்கு பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் விருப்பப்பட்டு இந்த தொழிலில் இருப்பது கிடையாது. குடும்ப சூழல், சிறிய வயதிலேயே நடந்த கொடுமைகள் உள்ளிட்டவற்றால் அவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் குஜராத்தில் ஒரு கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவருமே கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளப்படும் வழக்கம் இன்று வரை உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் வாடியா. இது குஜராத் தலைநகரில் அகமதாபாத்தில் உள்ள 200 கிலோமீட்டர் தொலைவில் பனஸ்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் தற்போது மொத்தம் 750 பேர் உள்ளனர். இதில் 350 பேர் பெண்கள்.
இந்த கிராமத்தில் உள்ள பெண்களை அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண்களே பாலியல் தொழிலில் தள்ளுகின்றனர். குறிப்பாக மனைவியை கணவனும், மகளை தந்தையும் அடுத்தவருடன் உறவு வைக்க கட்டாயப்படுத்தும் துயர சம்பவம் நடந்து வருகிறது. இது ஒரு பிசினஸ் என்ற வகையில் நடந்து வருகிறது.
இதற்காக அந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் காலையிலேயே வாடியா கிராமத்தில் உள்ள பலன்பூர் – தாராட் நெடுஞ்சாலைக்கு சென்று காத்து நிற்பார்கள். அந்த வழியாக வாகனங்களின் செல்பவர்களை தடுத்து நிறுத்தி தனது மனைவி, மகளுடன் உறவு வைக்க வாருங்கள் என்று அழைத்து வருவது இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த கிராமம் இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இப்படியே இருந்து வருகிறது. காலம் காலமாக இங்குள்ள பெண்கள் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அவர்களின் குடும்ப ஆண்கள் புரோக்கர்களாக செயல்பட்டு பணம் சம்பாதிக்கின்றனர்.
மேலும் நம் நாட்டில் குழந்தை திருமணங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் செய்தால் அந்த பெண்ணின் குடும்பத்தினர், திருமணம் செய்யும் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் வாடியா கிராமத்தில் இன்று வரை குழந்தை திருமணம் நடைமுறையில் உள்ளது. 7 வயது இருக்கும் சிறுமிகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு, அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
இந்த கிராமத்தில் தற்போது உள்ள சிறுமிகளை காக்க அவர்களின் தாய், பாட்டிகள் போராடி வருகின்றனர். பாலியல் தொழில் என்பது தங்களுடன் முடிவடைந்து விட வேண்டும். தங்களின் மகள்களை எந்த காரணம் கொண்டும் இந்த தொழிலுக்கு கொண்டு வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இதனால் தற்போது படிப்படியாக அந்த கிராமத்தில் உள்ள சிறுமிகள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுவதில் இருந்து தப்பித்து வருகின்றனர்.