International
oi-Vigneshkumar
டெல்லி: உலகின் மிக பெரிய பெருங்கடலாக இருக்கும் பசிபிக் பெருங்கடல், பூமியின் மேற்பரப்பில் உள்ள மிக பெரிய இயற்கை அமைப்பாக கருதப்படுகிறது. ஆனால், இந்த பிரம்மாண்டமான பெருங்கடல் மெல்ல மெல்ல சுருங்கி வருவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு என்ன காரணம்.. இதே நிலை தொடர்ந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
உலகின் மிக பெரிய பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் தான். இது சுமார் 15.5 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது. இது உலகின் அனைத்து கண்டங்கள் மற்றும் தீவுகளின் மொத்த நிலப்பரப்பை காட்டிலும் பெரியதாகும். பூமியின் மொத்த மேற்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை இந்த பெருங்கடல் ஆக்கிரமித்துள்ளது.

பின்னணி
உலகின் அனைத்து கடல்களிலும் உள்ள நீரில் பாதிக்கும் அதிகமான நீர் பசிபிக் பெருங்கடலில்தான் உள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள நீரை காட்டிலும் பசிபிக்கில் கிட்டத்தட்ட இரு மடங்கு நீர் அதிகமாக இருக்கிறது. சுமார் 20 முதல் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் இருந்த ஒரே பெரிய கண்டமான பாங்கியா (Pangaea) உடைந்தபோது, அதனைச் சுற்றியிருந்த பாந்தலாசா (Panthalassa) என்ற பழமையான பெருங்கடலும் பிரிந்தது.
அப்போது டெக்டானிக் தட்டுகள் நகர தொடங்கியதால் அட்லாண்டிக் பெருங்கடல் உருவானது. காலப்போக்கில் பாந்தலாசா படிப்படியாக சுருங்கி, இன்று நாம் காணும் பசிபிக் பெருங்கடலாக மாறியது. இப்போது பல நூறு ஆண்டுகள் கழித்து பசிபிக் பெருங்கடலாகச் சுருங்கி வருகிறதாம். இதற்கு காலநிலை மாற்றம் காரணமல்ல.. பூமியின் டெக்டானிக் தட்டுகளின் இயற்கையான நகர்வுகளே இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடல்தளம்
கடலின் அடிப்பகுதியில் இரண்டு தட்டுகள் விலகி செல்லும் இடங்களில் புதிய கடல்தளம் உருவாகிறது. அதேநேரம் ஒரு தட்டு மற்றொரு தட்டின் கீழ் சென்று, பூமியின் உள்பகுதிக்குள் மூழ்கும் பகுதிகள் பழைய கடல்தளம் அழிக்கப்படுகிறது. ஒரு பெருங்கடல் விரிவடைய போகிறதா அல்லது சுருங்க போகிறதா என்பதை இந்த இரண்டு செயல்பாடுகளில் எது அதிகமாக நடக்கிறது என்பதையே பொறுத்தே உள்ளது.
பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் Ring of Fire எனப்படும் நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் அதிகம் காணப்படும் பகுதிகளாகும். நியூசிலாந்து, ஜப்பான், வட மற்றும் தென் அமெரிக்காவின் ஆண்டில் மலைத்தொடர் வரை நீளும் இந்த பகுதியில் ஏராளமான Subduction Zoneகள் உள்ளன. இதுவே பசிபிக் கடலின் அடித்தளம் தொடர்ந்து பூமிக்குள் இழுக்கப்பட காரணமாக உள்ளன. புதிய கடல்தளம் உருவாகும் பகுதி இருந்தாலும், அதைவிட அதிகளவில் கடல்தளம் உள்ளே இழுக்கப்படுவதால்.. பசிபிக் பெருங்கடல் மெல்ல சுருங்கி வருகிறது.
பசிபிக் பெருங்கடலில்
பசிபிக் பெருங்கடலில் தான் உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மரியானா டரெஞ்ச் அமைந்துள்ளது. சுமார் 11,000 மீட்டர், அதாவது 36,000 அடி ஆழம் கொண்ட இந்த பகுதி, எவரெஸ்ட் சிகரத்தை தலைகீழாக வைத்தாலும் அதைவிட ஆழமாக இருக்கும். இந்த மரியானா டரெஞ்ச் என்பது ஒரு Subduction Zone ஆகும். அதாவது பசிபிக் பெருங்கடலின் அடித்தளம் பூமிக்குள் மூழ்கும் செயல்பாடு நடைபெறும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
சுருங்கி வருகிறது
இதுபோல பசிபிக் பெருங்கடல் தொடர்ந்து சுருங்கி வருவதாகவும் இன்னும் 20 முதல் 30 கோடி ஆண்டுகளுக்குள் பசிபிக் பெருங்கடல் முழுமையாக மூடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அப்போது அமெரிக்கா மற்றும் ஆசியா ஒன்றோடொன்று இணைந்து அமேசியா என்ற புதிய சூப்பர் கண்டம் உருவாகலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது. தற்போது ஆஸ்திரேலியாவும் கூட ஆண்டுக்கு சுமார் 7 சென்டிமீட்டர் வேகத்தில் ஆசியாவை நோக்கி நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இதற்கெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை. இது எடுத்தோம் கவிழ்த்தோம் என உடனடியாக நடக்கும் மாற்றமில்லை. இது பல கோடி ஆண்டுகள் நீளும் புவியியல் செயல்முறையாகும். எனவே, இதுகுறித்து உடனடி அச்சம் தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


