Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்பதில் அந்த அணி நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தாலும், அதற்கான முழு பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்க தேவையில்லை என்றும் சிஎஸ்கே அணி உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தோனி தலைமையில் உச்சத்தில் இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின், சிஎஸ்கே அணி சரிவை சந்தித்தது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கொண்டு வரப்பட்ட பின், ஒரு முறை கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி குறித்த விவாதங்கள் தீவிரம் அடைந்தன.

ஆனால் கடந்த சீசனில் சராசரியான ஒரு அணியை ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாகவே வழிநடத்தினார். ஆனால் சிஎஸ்கே அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக காயம் அடைந்து வெளியேறியது மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கியது. அதேபோல் ஒவ்வொரு தோல்வியின் போது ருதுராஜ் கெய்க்வாட் துவண்டுவிடாமல், தவறை சரி செய்து கொண்டே இருந்தார்.
சஞ்சு சாம்சனுடன் ஆலோசனை மேற்கொண்டு ஃபீல்டிங்கில் சிறந்த மாற்றங்களை ருதுராஜ் கெய்க்வாட் செய்தார். இருந்தாலும் சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதன் காரணமாகவே சிஎஸ்கே அணி நிர்வாகம் ரிடென்ஷனுக்கு முன் 2 அல்லது 3 நாட்கள் வீரர்கள் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்த 2 மாதங்களில் சிஎஸ்கே அணி வீரர்களில் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தோனி ஆகிய இருவருமே இந்த பயிற்சி முகாமை கண்காணிக்க இருக்கின்றனர். இதனிடையே சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகின.
ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகமும், உரிமையாளர்களும் கேப்டன்சியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் மாற்றப்பட வாய்ப்பே இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறது. ஒருவேளை ஹர்திக் பாண்டியா வந்தாலும், சிஎஸ்கே அணியின் கேப்டன்சியில் எந்த மாற்றமும் இருக்காது என்றே சென்னை அணிக்கு நெருக்கமாக இருப்பவர்கள் கூறுகின்றனர்.

