பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதை சிலர் நமது இரு நகரங்களுக்கும் எதிரான தீர்ப்பாக சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறான புரிதலாகும். கடந்த ஆண்டு DPR திருப்பி அனுப்பப்பட்டபோதும் ஏற்கனவே நான் கூறியதுபோல, தீர்வு என்பது நமது திட்ட அறிக்கைகள் மற்றும் ஆவணங்களில் உள்ள தொழில்நுட்ப மற்றும் கொள்கை குறைபாடுகளைச் சரிசெய்வதில்தான் உள்ளது. மாறாக உள்கட்டமைப்பு திட்டமிடலை மத்திய அரசு அல்லது பா.ஜ.க-வுக்கு எதிரான அரசியல் முழக்கமாக மாற்றுவதில் இல்லை.
கடந்த 2025 நவம்பரில், MoHUA முதல் DPR-களை முழுமையான ஆய்வுக்குப் பிறகு திருப்பி அனுப்பியது. அப்போது அதில் மக்கள் தொகை, தினசரி பயணிகளின் பயன்பாடு, உயர்மட்ட நிலையங்கள் அமைப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட முக்கியமான குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. ஆனால் இதற்குப் பிறகு, மீண்டும் கடந்த மே மாதத்தில் மாநில அரசு திருத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் சமர்ப்பித்தது.