தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் உற்றுநோக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான சென்னை மாவட்டத்தின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்த 2026 தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான களமாக மாறியுள்ளது.
ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில், இத்தொகுதி 85.98% என்ற மிக அதிகப்படியான வாக்குப்பதிவைப் பதிவு செய்தபோதே, ஒரு “அரசியல் மாற்றம்’ ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா 15,461 வாக்குகள் வித்தியாசத்தில் வலுவான முன்னிலையில் உள்ளார். தி.மு.க வேட்பாளர் கார்த்திக் மோகன் பின்னடைவை சந்தித்துள்ள செய்தி, திமுக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

சென்னை சென்ட்ரல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம், பாரம்பரியமாக திமுக மற்றும் இடதுசாரிகளின் பலமான கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில் தி.மு.க 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இந்தத் தொகுதியில், தற்போது த.வெ.க முன்னிலை பெற்றுள்ளது சாதாரணமான விஷயம் அல்ல.
அண்ணா நகர் எம்.எல்.ஏ எம்.கே.மோகனின் மகன் கார்த்திக் மோகனுக்காக, தி.மு.க-வின் தலைமை குடும்பத்தின் முக்கியப் புள்ளியான சபரீசன் நேரடியாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றியும், ஆளுங்கட்சியால் தற்போதைக்கு முன்னிலை பெற முடியவில்லை. தி.மு.க இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.