தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் நடிப்பில் உருவாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் சிக்கல்கள் காரணமாகத் தள்ளிப்போன நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் முதலில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (CBFC) சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தொடர் சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் கடந்த ஏழு மாதங்களாகத் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நீண்ட இழுபறிக்குப் பிறகு, கடந்த வாரம் இந்தத் திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் ‘ஏ’ (A Certificate) சான்றிதழ் வழங்கியது. இதனைத் தொடர்ந்து, படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாகப் படக்குழுவினர் தற்போது உறுதி செய்துள்ளனர்.
இத்திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘துணிவு’ ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் முக்கியக் கதாபாத்திரங்களில் பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ஜனநாயகன் பட ரிலீஸால் ஜிவி பிரகாஷின் இம்மோர்ட்டல் திரைப்படம் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”தளபதி வந்தா தள்ளிப் போய் தான ஆகணும்… அதுவும் ஒன் லாஸ்ட் டைம்.. ஜனநாயகன் படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, இம்மோர்ட்டல் திரைப்படம் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.


