முன்னாள் அமைச்சர் நேருவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர், “நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்தில் ரூ. 634 கோடி வரை லஞ்சம் கைமாறியிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியதுடன், 232 பக்க அறிக்கையை தமிழக டி.ஜி.பிக்கு அனுப்பிவைத்து, இதுகுறித்து வழக்குப் பதிய வேண்டுமென தெரிவித்தது.
கடந்தாண்டு அக்டோபரில் இக்கடிதம் வந்த நிலையில், அப்போதைய தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, இந்த விவகாரத்தில் வழக்குப் பதிய வேண்டுமென அ.தி.மு.க. எம்.பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, உடனடியாக வழக்குப் பதிய வேண்டுமென கடந்த பிப்ரவரியில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், தி.மு.க. ஆட்சி என்பதால் காவல்துறை தரப்பில் நோ ஆக்ஷன். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை இன்பதுரை தாக்கல் செய்தார். அதேபோல், தன்மீது வழக்குப் பதிய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டுமென நேரு தரப்பிலும், (தி.மு.க.) அரசு சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட காட்சிகளும் மாறின. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நேரு அவரின் சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது, கடந்த ஜூன் 5ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது. இந்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ந்துபோன நேரு தரப்பு, ‘எங்களது தரப்பு கருத்தை கேட்காமல், வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’ என்று வாதிட குற்றம்சாட்டப்பட்டவரின் கருத்தை கேட்டுவிட்டு எஃப்.ஐ.ஆர். போட வேண்டுமென கோர அடிப்படை உரிமையில்லை’ என அரசு தரப்பு பதிலடி கொடுக்க, வழக்கு விசாரனை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் பேசியபோது, “ஆகஸ்ட் 7ம் தேதி விசாரணையில், நேரு உள்ளிட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது சரிதான் என நீதிமன்றம் உத்தரவிடுமானால், அடுத்தகட்ட விசாரணைக்கு நேரு ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படும். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையால் நேரு கைதாக வாய்ப்புள்ளது. மற்றொருபுறம், எஃப்.ஐ.ஆர். பதிவானதை காரணம் காட்டி, ஏற்கெனவே கைப்பற்றிய ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கும். நேருவுக்கு சம்மன் அனுப்பவும், விசாரிக்கவும், கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. இதனால் ஆகஸ்ட் 7ல் என்ன நடக்கும் என திமுக வட்டாரம் அச்சத்துடன் காத்திருக்கிறது’ என்றனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரையிடம் பேசினோம். “ஈ.டி. கொடுத்த தகவலின் அடிப்படையில் நேரு மீது வழக்குப் பதிய வேண்டுமென நீதிமன்றத்தில் முறையிட்டேன். தற்போதைய அரசு வழக்குப் பதிந்துவிட்டது. இந்த வழக்கில் தீவிரம் காட்டுவதுபோலவே அதி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேர புகார், பழனி கோயில் நில அபகரிப்பு புகார் ஆகியவற்றிலும் த.வெ.க. அரசு தீவிரம் காட்ட வேண்டும்” என்றார்.

