ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த சேகர் பாபு – தடுத்து நிறுத்திய போலீஸ் | Former minister Sekhar Babu car stopped by police in tiruthani

Spread the love

ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவையொட்டி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வந்த கார் மலை அடிவாரத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி மலைக்கோயிலில் குவிந்தனர். இதையொட்டி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. முக்கிய பிரமுகர்கள் மற்றும் உபயதாரர்களுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் கார் பாஸ் வழங்கப்பட்டு, மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

திருத்தணி | சேகர் பாபு

திருத்தணி | சேகர் பாபு

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான பி.கே. சேகர் பாபு தனது குடும்பத்தினருடன் முருகப்பெருமானை தரிசிக்க காரில் வந்தார். ஆனால், மலை அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரது வாகனத்தை மலைக்குச் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசாரிடம் சேகர் பாபு விளக்கம் கேட்டதுடன், தனக்கு கோயில் நிர்வாகம் வழங்கிய கார் பாஸ் இருப்பதையும், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதி கிடைத்தால் மட்டுமே வாகனம் செல்ல அனுமதிக்கப்படும் என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கார் பாஸ் பெற்ற பிற வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சேகர் பாபுவின் வாகனத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டதாக கோயில் அறங்காவலர்கள் சுரேஷ் பாபு மற்றும் மோகனன் ஆகியோர் போலீசாரிடம் விளக்கம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர், சம்பவம் குறித்து அங்கிருந்த டிஎஸ்பியிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர் மாவட்ட எஸ்.பி. சாய் பிரணித்துக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்த பின்னர் சேகர்பாபுவின் வாகனம் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பின்னர், போலீஸார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும், அரசின் அழுத்தம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் திமுகவினர் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *