தவெகவில் அதிகாரப் போட்டி.. விஜயபாஸ்கர் வருகையை ரசிக்காத அமைச்சர் பர்வேஸ் தரப்பு.. பின்னணி என்ன? | Vijayabaskar: Minister Parvez Camp Unhappy Over Vijayabaskar’s High-Profile Induction into TVK due to Power politics

Spread the love

Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பதை அமைச்சர் பர்வேஸ் தரப்பு ரசிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. விஜயபாஸ்கர் போன்ற சீனியர் நிர்வாகி தவெகவில் இணைவது தனது அதிகாரத்தை குறைக்கும் என்று கருதுகிறார். அதுமட்டுமல்லாமல் இடைத்தேர்தலுக்கு பின் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டால், விஜயபாஸ்கருக்கு பதவி கிடைக்கலாம். இதனால் மாவட்டத்தில் தங்களின் அதிகாரம் குறையும் என்பதால், பர்வேஸ் தரப்பு அதிருப்தியில் இருக்கிறது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்திருப்பது, அக்கட்சியின் தற்போதைய முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான பர்வேஸ் தரப்பினரிடையே கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மெகா சேர்க்கை மாவட்ட அரசியலில் தங்களின் செல்வாக்கை அடியோடு பாதிக்கும் என அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Vijayabaskar

அதிமுகவில் நீண்ட கால அரசியல் அனுபவமும், பல தேர்தல்களைச் சந்தித்த உத்தியும் கொண்ட சி.விஜயபாஸ்கர் போன்ற ஒரு சீனியர் தலைவர் தவெக-விற்குள் நுழைவது, கட்சியில் இதுவரை தங்களுக்கு இருந்த தனித்துவத்தையும் அதிகாரத்தையும் பெருமளவில் குறைத்துவிடும் என்று பர்வேஸ் தரப்பு கருதுகிறது. அதிமுகவினர் வந்தால், உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் நிர்வாகிகளுக்கு பாதிப்பு வருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற பலத்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. ஒருவேளை அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தவெக-வில் புதிதாக இணைந்துள்ள அனுபவமிக்க சி.விஜயபாஸ்கருக்கு முக்கியப் பதவி அல்லது அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கரை தோற்கடிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இதனை பர்வேஸ் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். பர்வேஸ் தரப்பு தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தி வரும் சூழலில், விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி கிடைத்தால் மாவட்டத்தில் தங்களின் கை ஓங்குவது தடுத்து நிறுத்தப்படும் என பர்வேஸ் ஆதரவாளர்கள் கணக்கு விடுகின்றனர்.

இதன் காரணமாகவே விஜயபாஸ்கரின் தவெக இணைப்பை பர்வேஸ் தரப்பு சற்றும் ரசிக்கவில்லை. இதனை உணர்ந்தே நேற்றிரவு அமைச்சர் பர்வேஸை மரியாதை நிமித்தமாக விஜயபாஸ்கர் நேரில் சந்தித்தார். ஆனால் விஜயபாஸ்கரின் கைகள் இடைத்தேர்தலுக்கு பின்னரே ஓங்கத் தொடங்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *