இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க இடம்பெற வேண்டும் என்பதுதான் வி.சி.க உயர்நிலைக் குழுவின் விருப்பம். அதேபோல் தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே 75% அக்கட்சியினர் வேண்டுகோள்.
கட்சியினர் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்ட திருமா, கடந்த மே 16-ம் தேதி ஆதவ் அர்ஜுனாவைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

த.வெ.க தரப்பில், வரவிருக்கும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நீங்களே போட்டியிடுங்கள். எனவே நேரடியாக நீங்களே அமைச்சரவையில் இடம்பெற்றுவிடலாம் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் விஜய்யும் இதையே விரும்புகிறார் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
கட்சியினரின் விருப்பம், த.வெ.க கோரிக்கைகளைப் பரிசீலித்த திருமாவளவன் கிட்டதட்ட சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால், வன்னி அரசுதான் அமைச்சராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமாவே அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் எனக் கசியும் தகவல்கள் தமிழ்நாடு அரசியலின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. அவ்வாறு நடந்தால் அவரது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிவரும்” என்றனர்.
அமைச்சராகிறாரா திருமாவளவன்.. பொறுத்திருந்து பார்ப்போம்!