இது தொடர்பாக, அனைத்து டாஸ்மாக் கடைகளின் பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பு கூட்டு குழு நிர்வாகி தமிழ்ச்செல்வனிடம் பேசுகையில்,
“நாமக்கல் மாவட்டத்தில் 169 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் மாவட்டம் முழுதும் 10 கடைகள் மூடப்பட்டுள்ளது. இது போல தமிழகத்தில் 710 கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்பட வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்த அவர், “மதுபான பாட்டில்களை எம்ஆர்பி விலைக்கு விற்க நாங்க தயார் !.. டாஸ்மாக் கடைகளில் மாசம், மாசம் நடக்கும் நிர்வாக செலவுகளை முழுமையாக ஏற்க அரசு தயாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
“பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க கூடாது என்பதை ஏற்கிறோம். வரவேற்கிறோம். நேர்மையான முதல்வர் நேர்மையான ஆட்சியில் நாங்களும் இனி நேர்மையாக இருக்கிறோம். ஆனால், அரசு செய்ய வேண்டிய வேலை மற்றும் செலவுகள் எங்கள் தலையில் போடப்பட்டது.
ஒவ்வொரு கடையிலும் அதன் நிர்வாக செலவுகளை இதுவரை நாங்கள் செய்து வருகிறோம். அதாவது, டாஸ்மாக் கட்டத்தின் வாடகை பாதி நாங்கள் தருகிறோம். மின்கட்டணத்தில் பாதி நாங்க கட்டுகிறோம், வாரத்தில் 2 முறை வரும் சரக்கு லோடு இறக்கும் கூலி 4000 முதல் 5000 வரை நாங்கள் தான் கொடுக்கிறோம்.
இவை அல்லாமல் உயர் அதிகாரி பார்வையிடும் போது என பல்வேறு பார்மாலிட்டிஸ் செலவுகளை இனி அரசே செய்து கொடுக்கட்டும். இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கு வதை நிறுத்திக் கொள்கிறோம்” என்றார்.
மேலும், “டாஸ்மாக் கடை பணியாளர்கள் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் களையும் அட்டைப் பெட்டிகளை வைக்கவும் போதிய இடவசதியை ஏற்படுத்தி தர வேண்டும்” என்றார்.