
தவெகத்திற்கு காமராஜ் எம்எல்ஏ ஆதரவு கடிதம் அளித்த விவகாரம் தொடர்பாக அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி. தினகரன் ஆளுநரைச் சந்தித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தமிழக முதல்வராக நியமிக்க ஆதரவு தெரிவிக்கும் வகையில், மன்னார்குடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சட்டப்பேரவை உறுப்பினரான எஸ். காமராஜின் ஆதரவு கடிதத்தை அவர் ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் விஜய்யின் அரசியல் இமேஜை உடைக்கும் வகையில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் அமமுக தலைவர் டிடிவி தினகரன். மேலும் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதால் தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளதுடன், காமராஜ் விவகாரத்தில் காவல்துறையில் புகார் அளிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். இதன் காரணமாகவும் விஜய்க்கு மேலும் சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில்: “ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மோசடி செய்கிறது தவெக. ஆதரவு கடிதத்தை எப்படி வெள்ளை பேப்பரில் எழுதியா காமராஜ் கொடுத்திருப்பார்? எனது ஒப்புதலோடு கடிதம் கொடுத்தார் என நிரூபிக்க தயாரா? . கையெழுத்திட்ட வீடியோவை ஆளுநரிடம் ஒப்படைக்காதது ஏன்? காமராஜ் கையெழுத்திடும் முழு வீடியோவை வெளியிட வேண்டும். என்ன பேரம் பேசினார்கள் என தெரிந்துவிடும். வீடியோ வெளியிட்ட தவெக ஒரிஜினல் கடிதத்தை வெளியிட வேண்டியது தானே. தவெக அறிவு ஜீவிகள் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
விஜய் பெரிய ஹீரோவாக இருக்கலாம், 108 சீட் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் கடந்நத 30 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் அரசியலில் இருக்கிறோம். பல அரசுகள், பல முதல்வர்கள், பல கட்சிகள், பல விசரணைகளை, பல ரெய்டுகளை நாங்கள் பார்த்தவர்கள். உங்களை மாதிரி ஓடி ஒளிந்து கொள்ளும் ஆள் நாங்கள் கிடையாது. முதல்வர் ஆகும் முன்பே விஜய் போர்ஜரி செய்கிறார். விஜய் ஆட்சிக்கு தமிழகத்திற்கு பேரழிவு.
எனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறி, எங்களது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த தவெகவினர் முயல்கின்றனர். தவெகவினர் என்னை மிரட்டவும், பயமுறுத்தவும் பார்க்கின்றனர். விஜய் 108 சீட் வென்றிருந்தால் எனக்கு என்ன.? விஜய் எனக்கு என்ன மாமனா? மச்சானா? நாங்கள் ஏன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? விஜய் பெரிய ஹீரோவாக இருந்தால் எனக்கு என்ன? காமராஜ் கையெழுத்திட்டதாக கூறி தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். முதல்-அமைச்சர் ஆவதற்காக விஜய் மோசடி செய்கிறார். மக்களுகு தவெக விளக்கம் அளிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.