தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே ஆட்சி அமைக்கப்போவது யார்? என்றக் கேள்வியுடன் தேர்தல் முடிவு வெளியாகி 4 நாள்கள் ஆகியும் தொடர்கிறது.
இந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தவெக 107 இடங்களைப் பெற்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்களுடன் இணைந்து ‘கூட்டணி ஆட்சி’ அமைக்க முயற்சிப்பது சட்ட ரீதியாக பலவீனமானதாகப் பார்க்கப்படுகிறது.
தனிப்பெரும் கட்சியாக உரிமை கோரியிருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு (Floor Test) வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால் காங்கிரஸ் கடிதத்துடன் சென்றது அரசியல் ரீதியான தவறு. மேலும், ஆளுநரைச் சந்திப்பதில் முறையான புரோட்டோகால் பின்பற்றப்படவில்லை. மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிப்பது போன்ற நடவடிக்கைகள் ஒரு கட்சியின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது.
தவெக ஆட்சி அமைக்கத் தவறும்பட்சத்தில், அதிமுக ஆட்சி அமைக்க உரிமை கோர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கொள்கை ரீதியாக மாறுபட்டிருந்தாலும், தமிழக அரசியலில் புதிய சக்தியான விஜய் வளர விடக்கூடாது என்ற நோக்கில், திமுக வெளியே இருந்து அதிமுக-விற்கு ஆதரவு அளிக்கக்கூடும். அரசியலில் “எதிரிக்கு எதிரி நண்பன்” என்ற அடிப்படையில் இந்த நகர்வு அமையலாம்.
சினிமா பாணியில் ‘டிரைலர்’, ‘ஆடியோ ரிலீஸ்’ செய்வது போல அரசியலை அணுக முடியாது என்பதை தற்போதைய சூழல் உணர்த்தியுள்ளது. தவெக தற்போது ஆபத்தான நிலையில் இருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்தால் தவெக உறுப்பினர்களைத் தக்கவைப்பதும் விஜய்க்கு பெரும் சவாலாக இருக்கும். நிதி நெருக்கடி மற்றும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இடையே, புதிய வாக்குறுதிகளான ரூ. 2500 வழங்கும் திட்டம் போன்றவை சாத்தியமா என்ற கேள்வியும் இருக்கிறது. இறுதியில், விஜய்க்கு கிடைத்துள்ளது ‘மலர் கிரீடமா’ அல்லது ‘முள் கிரீடமா’ என்பது இன்னும் சில தினங்களில் உறுதியாகிவிடும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.