தவெக:“5 மொழி பேசுவேன்… அரசியலில் இருப்பதாக கற்பனையில் இருந்தேன்" – இளம் அமைச்சர் கீர்த்தனா யார்?

Spread the love

தனது 29-வது வயதிலேயே, நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ மிக இளம் வயது சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் எஸ். கீர்த்தனா. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், தமிழக அரசியலில் அக்கட்சியின் புதிய முகங்களில் ஒருவராகவும், கவனிக்கப்படுபவராகவும் இருக்கிறார்.

யார் இந்த எஸ். கீர்த்தனா?

1996-ம் ஆண்டு விருதுநகரில் பிறந்த கீர்த்தனா, தமிழ் வழிக் கல்வி பயிற்றுவிக்கும் அரசுப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும் (B.Sc), பின்னர் 2019-ம் ஆண்டு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் முதுகலைப் பட்டத்தையும் (M.Sc) அவர் பெற்றார்.

தவெக அமைச்சர் கீர்த்தனா
தவெக அமைச்சர் கீர்த்தனா

முழுநேர அரசியலில் நுழைவதற்கு முன்பு, கீர்த்தனா ‘Showtime Consulting’ மற்றும் ‘IPAC’ ஆகிய நிறுவனங்களில் அரசியல் ஆலோசகராகவும், டிஜிட்டல் தேர்தல் பிரச்சார வியூக குழுவில் பணியாற்றினார். மேலும், தெலுங்கு தேசம் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களின் வியூக குழுவில் முக்கியப் பங்காற்றினார்.

கடந்த சில ஆண்டுகளாக, முன்னாள் முதலமைச்சர்களான மு.க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி மற்றும் தற்போதைய ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் அவர் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்கிறார்கள். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தார்.

அதில், “ஒரு அரசியல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றியது, ஆட்சி நிர்வாகம் மற்றும் அரசு எந்திரத்தின் செயல்பாடு குறித்து ஆழமான புரிதலைத் எனக்கு வழங்கியது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளைச் சரளமாகப் பேசுவேன். அதனால் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றுவதற்கும், மக்களுடன் இன்னும் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கும் எனக்கு பெரிதும் உதவியது. இந்தியா முழுவதும் உள்ள அதிகமான மக்கள் நடிகர் விஜயின் செய்தியைப் புரிந்துகொள்ளவும், அதனுடன் தங்களை இணைத்துக்கொள்ளவும் ஏதுவாகவே தான் இந்தியில் பேசிவருகிறேன். நான் எப்போதும் என்னை அரசியலில் இருப்பதாகவே கற்பனை செய்து வந்தேன். அதனால்தான் ஒரு அரசியல் வியூக வகுப்பாளராக எனது பணிவாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தேன்.

தவெக அமைச்சர் கீர்த்தனா
தவெக அமைச்சர் கீர்த்தனா

நான் பல்வேறு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். அதன் மூலம் அரசியல் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், நிர்வாக எந்திரம் எவ்வாறு இயங்குகிறது என்பதையும் நன்கு புரிந்துகொண்டேன். த.வெ.க என்பது அனைவரும் எளிதில் அணுகக்கூடிய ஒரு இடமாகும். எனக்கு அரசியல் பின்னணியோ அல்லது பணபலமோ இல்லாவிட்டாலும், அங்கே எனக்கு இடமுண்டு. மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால், உங்களை த.வெ.க-வுக்கு வரவேற்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

2026-ம் ஆண்டு நடைபெற்ற சிவகாசி சட்டமன்றத் தேர்தலில், கீர்த்தனா 68,709 வாக்குகளைப் பெற்று, காங்கிரஸ் வேட்பாளர் ஜி. அசோகனை 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *