
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், இது பாஜகவிற்கு எதிரான கூட்டணி… இது மதசார்பற்ற கூட்டணி… இந்த கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது .. என்று ஏறும் மேடைகளிலெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதும், திமுகவின் கூட்டணிக் கூடாரம் காலியாகத் தொடங்கியதே ஸ்டாலினுக்கு பெருத்த அடியாக அமைந்தது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை பெற முடியவில்லை என்பதால் மக்கள் தீர்ப்பை மதித்து தான் திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்கிறோம் என்று கூறி விசிக, சிபிஐ, சிபிஐஎம் ஆகிய கட்சிகள் தெரிவித்தன. ஆனால், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவே கூறின. அடுத்தடுத்த நாட்கள் அவர்களின் நிலைப்பாடானது திமுகவிற்கு எதிராக இருந்ததாகவும், திமுக – அதிமுக இடையே ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடந்ததால் அதனை தடுப்பதற்கே தவெகவிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறியதால் மக்கள் குழப்பம் அடைந்தனர்.
இதனால் திமுக மீது விமர்சனங்கள் அதிகமாகின. எங்கள் கூட்டணியை விட்டுக்கொடுத்துதான் தவெக ஆட்சி அமைக்கச் சொன்னோம் என்று கூறிவிட்டு, மறைமுகமாக அதிமுகவுடன் கைக்கோர்க்க திமுக தயாராகியது அரசியல் குற்றம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மற்றுமொரு கூட்டணி வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெகவுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக – மதிமுக இடையே சிக்கல் இருந்துவருகின்றது. துரை வைகோவிற்கும் திமுக சீனியர்களுக்கும் இடையிலான மோதலால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பெரும் பிரச்னைகள் வெடித்தன. அதோடு, இந்த சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக நின்றதால், மதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.
மதிமுக இந்த தேர்தலில் மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி உள்ளிட்ட 4 தொகுதிகளில் போட்டியிட்டது. நான்கு தொகுதிகளிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இவற்றுள் சீர்காழி மற்றும் கடையநல்லூர் 2 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் நகர்வுகள் குறித்தும், அடுத்த கட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் பட்சத்தில் தவெகவுடன் கூட்டணி வைக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.