திமுகவில் `அக்கா'வுக்கு எதிராக தடாலடி அரசியல் டு பதற்றத்தில் எடப்பாடி!‌ | கழுகார் அப்டேட்ஸ்

Spread the love

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனுக்கும் அவரின் தம்பியும் மாநகராட்சி மேயருமான ஜெகனுக்கும் இடையே அதிகாரப்போர் நிலவி வருவது ஊர் அறிந்த விவகாரமே. நடந்து முடிந்த தேர்தலில், தூத்துக்குடி தொகுதிக்குப் பல திட்டங்களைச் செய்தும் தன் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத கீதா ஜீவன், கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம்.

கீதாஜீவன்

அவரது தோல்விக்கு, ‘மீனவர்களின் வாக்குகளைக் கவர நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்ட இனிப்புகளைக் கொடுக்கவிடாமல் தடுத்ததே அவரது தம்பி தான்’ என்கிறார்கள் கீதா ஜீவனின் ஆதரவாளர்கள். கூடவே, ‘தி.மு.க-வில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்’ என எழும் குரலைக் கேட்டு குஷியான ஜெகன், அக்காவின் தோல்வியை காரணம் காட்டி, மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிவிட இப்போதிலிருந்தே ஸ்கெட்ச் போட்டுக் காய் நகர்த்துகிறாராம்.

தம்பியின் தடாலடி அரசியலால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறாராம் கீதாஜீவன்.

ஜில் மாவட்ட அ.தி.மு.க-வில், கவுன்சிலர்களில் தொடங்கி முன்னாள் எம்.எல்.ஏ வரை பலருமே த.வெ.க கூடாரத்தில் இணைந்திருக்கிறார்கள். அ.தி.மு.க-வின் ஒட்டுமொத்த கூடாரமே காலியாகும் அளவிற்கு, த.வெ.க-வை நோக்கிய படையெடுப்பு நடந்து வரும் நிலையில், கட்சி தாவிய அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிதாக த.வெ.க அலுவலகம் ஒன்றையும் மாவட்ட தலைநகரில் திறந்திருக்கிறார்களாம். நடக்கும் கூத்தைக் கண்டு பதறிய த.வெ.க மாவட்டச் செயலாளரும் அவரின் கணவரும் கட்சி அலுவலகத்தைப் பூட்டிவிட்டு சென்னைக்கே ஓடியிருக்கிறார்களாம். முக்கிய நிர்வாகிகள் சிலரைச் சந்தித்த மா.செ., “உள்ளாட்சித் தேர்தலுக்கு அடிபோட்டு, அ.தி.மு.க-வினரை கட்சியில் இணைத்தால் முதலுக்கே மோசத்தில் முடியும்” என கதறியிருக்கிறார். ‘தளபதியைச் சந்தித்து கள நிலவரத்தைச் சொல்லாமல் நகர மாட்டோம்’ என அவர்கள் காத்திருப்பதால், ஜில் மாவட்ட த.வெ.க-வில் வெப்பம் அதிகரித்திருக்கிறது.

கடைக்கோடி மாவட்டத்தைச் சேர்ந்த சூரிய கட்சியின் மாஜிக்கு, நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அந்த சமயத்திலேயே அவர் த.வெ.க-வில் இணைந்து போட்டியிடும் முனைப்புடன் சில முயற்சிகளைச் செய்தார். ஆனால், அந்த சமயத்தில் எதுவும் கைகூடவில்லை. இப்போது, விஜய் தலைமையிலான ஆட்சி அமைத்த பின், ‘அன்று எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்று மாண்புமிகு ஆகியிருப்பேனே’ எனத் தினமும் ஆதரவாளர்களிடம் புலம்பித் தள்ளுகிறாராம். இப்போதும்கூட தனது எதிர்கால அரசியலை நினைத்து விஜய் கட்சிக்குத் தாவும் திட்டத்துடன் இருக்கிறாராம் அந்த மாஜி.

சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, த.வெ.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி மலர்ந்திருக்கும் நிலையில், ஆந்திராவை ஒட்டிய மாவட்டத்திலிருக்கும் த.வெ.க எம்.எல்.ஏ-வை சந்திக்கச் சென்றிருக்கிறார் கதர் கட்சியின் மாநில பெண் நிர்வாகி ஒருவர். அப்போது, ‘என்னுடைய கண்ட்ரோலில் 200 மகளிர் சுய உதவிக்குழுக்கள் இருக்கின்றன’ எனக் கூற, அதற்கு எம்.எல்.ஏ-வோ, ‘எங்கள் கூட்டமே பெரிய கூட்டம்.

அதனால் உங்களின் மகளிர் சுய உதவிக்குழுக்களின் ஆதரவு எனக்குத் தேவையில்லை’ எனப் பேசினாராம். கடுப்பான கதர் கட்சியின் பெண் நிர்வாகி அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டாராம். இதே ஸ்டைலில்தான் த.வெ.க நிர்வாகிகள் தொடங்கி அனைவரையும் அந்த எம்.எல்.ஏ டீல் செய்வதால், ‘சொந்தக் கட்சியினரையும் கூட்டணிக் கட்சியினரையும் இப்படி அவமரியாதை செய்தால், யார்தான் உடனிருப்பார்கள்… கட்சி எப்படி வளரும்’ என்று பலரும் முணுமுணுக்கிறார்கள்.

கடந்த மே 10-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் முதல்வர் விஜயின் பதவி ஏற்பு விழா நடந்தது அல்லவா… அதுதொடர்பான பாதுகாப்பு ஆலோசனைக்கு கூடுதல் கமிஷனர் ஒருவர் மற்றொரு சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு செல்போனில் தொடர்பு கொண்டாராம். ஆனால் அந்த ஐ.பி.எஸ் அதிகாரி அழைப்பை ஏற்கவில்லையாம். அதன்பிறகு தன்னுடைய கேபினுக்கு வந்த கூடுதல் கமிஷனர், இன்டர்காமில் மீண்டும் அந்த ஐ.பி.எஸ் அதிகாரியை தொடர்பு கொண்டாராம். அப்போதும் அழைப்பை ஏற்காததால் நேரிலேயே ஐ.பி.எஸ் அதிகாரியின் கேபினுக்கு சென்றாராம். அப்போது, ‘யாரைக் கேட்டு இங்கு வந்தீர்கள்…’ என சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரி கடுகடுக்க…. கோபத்தில் விடுமுறையில் சென்றுவிட்டாராம் அந்த கூடுதல் கமிஷனர்.

எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அவருக்கு எதிராக துணிந்து செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள் அதிருப்தி அ.தி.மு.க நிர்வாகிகள். ‘த.வெ.க பாதி, ஓய்வு மீதி’ என முக்கிய நிர்வாகிகள் சைலண்ட் மோடுக்குச் சென்றுவிட்ட நிலையில், உண்மை விசுவாசிகள் சிலர், ‘அஞ்சா நெஞ்சன், தன்மான சிங்கம்’ என சேலம் முழுக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

அதைக் கண்டு கடுப்பான அதிருப்தி நிர்வாகிகள் சிலர், ‘தொடர் தோல்வி பழனிசாமி உடனடியாக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என ஊர் ஊராக போஸ்டர் ஒட்டுகிறார்களாம். அதிலும், போஸ்டர்களில் தங்களின் பெயரைத் தைரியமாகப் போடுகிறார்களாம். தன் மரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளூரில் அரங்கேறும் போஸ்டர் யுத்தத்தால் பதற்றத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *