`திமுக-வைத்தான் சொன்னேன், தேமுதிகவை அல்ல!’ – பிரேமலதா விஜயகாந்துக்கு திருமாவளவன் பதில்

Spread the love

வி.சி.க தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, “நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்து, திடுமெனக் கூட்டணியில் இணைந்த கட்சிக்கு யாரும் எதிர்பாராத அளவு தொகுதிகளைத் தந்தபோது, ஏற்கெனவே இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி அளித்திருக்குமா? நல்லுறவு, நல்லிணக்கத்தை கூட்டணிக் கட்சிகளுடன் பேணி பாதுகாக்கும் பொறுப்பு தலைமை தாங்கும் கட்சியிடம்தான் உள்ளது” என்று தே.மு.தி.கவைச் சாடியிருந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் திருமாவளவன் பேசியது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அதற்கு பதிலளித்த அவர், “சகோதரர் வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதனால் நீங்கள் கூட்டணி மாறினீர்கள். அதுதானே உண்மை? கம்யூனிஸ்டுகளைப் போல் நீங்களும் இருந்திருக்கலாமே? நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி. நீங்கள் வென்றது இரண்டு இடங்கள். அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்பதால் போயிருக்கிறீர்கள். அதற்காக நீங்கள் எதற்கு தே.மு.தி.கவை இழுக்கிறீர்கள்? மாற்றி மாற்றிப் பேசாதீர்கள். முடிவெடுக்க வேண்டியது தி.மு.கவும் அதன் தலைமையும்தான். அப்படிப் பார்த்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளை அண்ணன் ஸ்டாலின் கூடுதல் இடமாகவே கொடுத்திருக்கிறார். அதை நாங்கள் கேட்க முடியுமா? நாங்கள் ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை?

அதனால், நாம் வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அடுத்தவர் மீது குற்றம் சொல்வது மிக மிகத் தவறான செயல். அதை அண்ணன் திருமாவளவன் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன். இனிமேலும் அதுபற்றி அவர் பேச மாட்டார் என்று நினைக்கிறேன். மீண்டும் அவர் அதைப் பற்றிப் பேசினால், ‘குப்புற விழுந்தும் என் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாகிவிடும்” என்று கடுமையாகப் பேசியிருந்தார். இந்த நிலையில்தான் நேற்று கடலூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருமாவளவன்
திருமாவளவன்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் த.வெ.க கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரசாரம் மேற்கொள்ளும். அந்தத் தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக வி.சி.க பாடுபடும். தி.மு.க தன்னை சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நான் சில கருத்துகளைப் பேசினேன். மற்றபடி தே.மு.தி.க மீது குற்றம் சுமத்துவது என் நோக்கமில்லை. தே.மு.தி.க-வுக்கு பத்து தொகுதிகள் கொடுத்தபோது அதை வரவேற்று, நியாயத்தை எடுத்துச் சொன்னது நான்தான். அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

தி.மு.க.வுடன் இருந்த கட்சிகள் திடீரென பதவிக்காக ஓடிவிட்டார்கள் என்று துரோகப் பட்டத்தைச் சூட்டிய போது, அந்தக் கட்சிகள் வெளியேறுவதற்கு அது மட்டும்தான் காரணமா… வேறு காரணங்கள் இல்லையா… என்கிற கோணத்தில் நான் சில கருத்துகளைச் சொன்னேன்.`தே.மு.தி.க திடீரென்று கூட்டணிக்குள் வந்தபோது, மற்ற கட்சிகளுக்கு மகிழ்ச்சி மட்டும் இருந்திருக்குமா..?’ என்றுதான் கேள்வி எழுப்பினேனே தவிர, தி.மு.க கூட்டணிக்குள் தே.மு.தி.க-வை சேர்த்து 10 சீட்கள் கொடுத்தார்கள் என்ற கோணத்தில் கருத்து சொல்லவில்லை. ஆனால் நான் தே.மு.தி.க-வை குறை சொன்னது போல பிரேமலதா விஜயகாந்த் புரிந்து கொண்டிருக்கிறார். அவரது கருத்தை நான் எதிர்க்க விரும்பவில்லை” என்றார்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் – திமுக

அதற்கு முன்பு திருமண விழாவில் பேசிய அவர், “வி.சி.க இன்று ஆளும் கட்சியாகப் பரிணமித்துள்ளது. நமக்கு முதலமைச்சர் என்ற அங்கீகாரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அமைச்சரவையில் பங்கேற்ற கட்சியாக வி.சி.க இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு கட்சியாக வளர்ந்துள்ளது. அது பலருக்கு வயிற்றெரிச்சலைக் கொடுக்கிறது. அவதூறுகளை வாரி இறைக்கிறார்கள். அந்த விமர்சனங்களைக் கடந்து நம் இலக்கை நோக்கி இன்னும் வேகமாக செல்ல வேண்டும். உறுதியான வலிமை பெற்ற ஆளும் கட்சியாக நாம் பரிணாமம் பெற வேண்டும். அதற்கான ஒளிமயமான வாய்ப்பு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *