புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்ட த.வெ.க புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயலாளர் ஜ.முகமது பர்வேஸ் 10,062 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் ராமச்சந்திரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜாபர் அலி அ.தி.மு.கவின் வர்த்தக அணி இணைச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்து முக்கிய புள்ளியாக இருந்து வந்தவர்.
இவரது மகன் முகமது பர்வேஸ். சட்டம் படித்துள்ள முகமது பர்வேஸ். சிறு வயதில் இருந்தே விஜய் மீது கொண்ட அன்பு காரணமாக விஜய் ரசிகராக இருந்து வந்துள்ளார்.
விஜய் படம் ரிலீஸ் என்றால் தன்னுடைய ஆதராவளர்கள் சிலரை திரட்டி புதுக்கோட்டையையே அதகளப்படுத்திவிடுவார். விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனே இவரும் தேர்தல் களத்தை நோக்கி பணி செய்ய ஆரம்பித்துவிட்டார்.

முதலில் கட்சியாக இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கியபோது, விஜயின் ஆணைக்கினங்க முதல் ஆளாக பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தார். வனவிலங்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியை சீரமைப்ப்பது, விஜய் படிப்பகம், விலையில்லா விருந்தகம் என பல்வேறு ஏற்பாடுகளை முன்னெடுத்து அதை தொடர்ந்தும் வருகிறார்.
குறிப்பாக, புதுக்கோட்டை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவிலேயே நலதிட்ட உதவிகளையும் செய்து வருகிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தலில் நின்று அதிக வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று புதுக்கோட்டை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினராக மாறி விஜயின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இந்த நிலையில் தான் இந்த தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தாலும், அறந்தாங்கியில் இன்னும் கூடுதல் வெற்றி வாய்ப்பு இருப்பதால் அறந்தாங்கி தொகுதி பர்வேஸ்க்கு ஒதுக்கப்பட்டது.
கட்சி நிர்வாகிகள் சிலரை நேரடியாகவே மிரட்டுகிறார் என்றெல்லாம் பர்வேஸ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால், அதையெல்லாம், தவுடுபொடியாக்கி வெற்றிக் கனியை பெற்றிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் தான் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர். ராமச்சந்திரன் மீதான அதிருப்தி, மத அடையாளம் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், வேட்பாளர் அறிவிப்பு வந்த உடனே பர்வேஸ் களத்தில் இறங்கி பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார்.
கடற்கரை தொடங்கி நகரம் முழுவதும் செய்த சூராவளி பிரச்சாரமும், விஜயின் பிம்பமும் பர்வேஸின் வெற்றிக்கு வழிவகை செய்திருக்கிறது..