சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி்க் கழகம் யாரும் எதிர்பாராத வகையில் 108 இடங்களைக் கைப்பற்றி, சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாள்களாகியும், தமிழக ஆளுநர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் த.வெ.க தலைவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணிய சுவாமி தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகத் தேர்வு செய்யப்பட்ட பிறகும், அதன் தலைவர் திரு. விஜய் அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் வகையில், ஆளுநர் உடனடியாக த.வெ.க தலைவரை அழைத்து அமைச்சரவை அமைக்க உத்தரவிட வேண்டும். திரு. விஜய் அவர்களை முதலமைச்சராகப் பதவியேற்கச் செய்து, சட்டப்பேரவை தளத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுவாக, ஒரு தேர்தலில் எந்தக் கட்சிக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பதே முன்னுதாரணமாக உள்ளது. அந்த வகையில், த.வெ.க தலைவருக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். அதேநேரம், இன்று மாலை தவெக தலைவர் ஆளுநரை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.