மறுநாள் வாணியம்பாடி தொகுதி நிர்வாகிகள் சந்திப்பிலும் வாணியம்பாடி நகரச் செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார் உட்பட பல்வேறு அணிகளைச் சார்ந்த நிர்வாகிகளுமே எ.வ.வேலு, தேவராஜி ஆகிய 2 பேர் மீது புகார்களை அடுக்கினர்.
ஆம்பூர் தொகுதி சந்திப்பின்போதும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
“41 தொகுதிகளுக்கான வடக்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளராக எ.வ.வேலு நியமிக்கப்பட்டதே தவறு. அவர் `சுய-சமூக’ அரசியல் பற்றுடன் செயல்பட்டுவந்தார். இதனால், பெரும்பான்மையாக வாழும் வன்னியர் சமூக மக்கள் தி.மு.க-வை ஆதரவிக்கவில்லை. இதன் எதிரொலியாகவே, 41 தொகுதிகளில் 6-ல் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. தோல்விக்குப் பிறகாவது, தி.மு.க தலைமை சிலவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்துக்கு எந்த வகையிலும், எ.வ.வேலு பொறுப்பாளராகத் தொடரக் கூடாது.

அதேபோல, 72 வயதாகும் மாவட்டச் செயலாளர் தேவராஜி உடன்பிறப்புகள் ஒருவரையும் அரவணைத்துச் செல்வதில்லை. தேவராஜியின் சொந்த ஊரில் பதிவான வாக்குகளில், தி.மு.க 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் தேவராஜி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், அந்தச் சமூக மக்களிடம் அவருக்கான செல்வாக்குக் கொஞ்சம்கூட இல்லை என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது.
அதேபோல, ஆம்பூர் தொகுதியில் தி.மு.க மீண்டும் வெற்றிபெற்றிருந்தாலும், எம்.எல்.ஏ வில்வநாதனின் சொந்த ஊரில் பதிவான வாக்குகளிலுமே தி.மு.க 3-வது இடத்துக்குத்தான் தள்ளப்பட்டிருக்கிறது. வில்வநாதனை மீண்டும் வேட்பாளராக அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க-வில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் விலகினார்கள். இதன் எதிரொலி, வில்வநாதன் ஒன்றியச் செயலாளராக இருக்கும் பகுதியிலும் தி.மு.க-வுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
இதையெல்லாம், ஆய்வுக் குழுவினரிடம் எடுத்துக்கூறியுள்ளோம். கட்சியைப் பலப்படுத்த வேண்டுமெனில், இளையச் சமுதாயத்தை வழிநடத்தும்வகையில் நடுத்தர வயதுமிக்க நிர்வாகியை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுவாக முன்வைத்திருக்கிறோம்’’ என்கின்றனர் மாவட்ட உடன்பிறப்புகள்.!