திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனி நீதிபதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துவரும் நிலையில், தங்களுக்கு எதிரான உத்தரவுகளை ரத்துசெய்யக் கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதால் அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் கோரப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘கார்த்திகை தீபத்தின்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்’ எனக் கேள்வி எழுப்பினர்.

‘இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை’ எனக் கூறிய நீதிபதிகள், ‘அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். சட்ட நடைமுறைகளைக் காரணம் காட்டி இந்த வழக்கை தீவிரப்படுத்தாதீர்கள்’ எனக் கூறி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்த அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.