கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
கரூர் மாவட்டம், குளித்தலை, மலையப்பன் நகரைச் சேர்ந்த திருமணமான 25 வயது பெண். இவர், மெடிக்கலில் பணிபுரிகிறார். நேற்று இரவு, 7 மணிக்குப் பணி முடிந்து தன் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கிழக்கு ஒன்றிய த.வெ.க., செயலர் ரமேஷ், பைக்கில் பின்தொடர்ந்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதில் நிலை தடுமாறி, பெண்கள் இருவரும் விழுந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள், ரமேஷுக்குத் தர்ம அடி கொடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் புகாரில், கடந்த 3 மாதங்களாக த.வெ.க நிர்வாகி ரமேஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை தந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை விசாரணை நடத்துவதாகத் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், “குளித்தலை அருகே இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணைக் கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் த.வெ.க ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தன் கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, முதலில் தன் கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.