இந்தக் காவியத்தை நோலன் வெறும் புராணச் சாகசமாக அணுகவில்லை. கடவுள்கள், அரக்கர்கள், மாய உலகங்கள் என புராணக் கூறுகள் நிறைந்திருந்தாலும், அதன் மையத்தில் மனித உணர்வுகளையே முன் நிறுத்தியிருக்கிறார். குற்றவுணர்வு, காத்திருப்பு, இழப்பு, குடும்பப் பிணைப்பு, மனித அறம் என உணர்வுகள் வழியாக இந்தப் புராணக் கதையை இன்றைய பார்வையாளருக்கும் நெருக்கமானதாகச் சொல்லயிருக்கிறார். அதே நேரத்தில், போரில் வெற்றி பெற்றவர்களுக்குக்கூட இறுதியில் எதுவும் மிஞ்சுவதில்லை; மனிதனின் கொடிய குணங்களை நியாயப்படுத்த அவன் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் காரணம்தான் போர் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
ஒடிசியஸாக மேட் டேமன் உடலளவிலும், நடிப்பிலும் அபாரமான உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இளம் போர்வீரராக இருந்து, போர்களால் சோர்ந்த அரசனாக மாறும் வெவ்வேறு காலகட்டங்களை மிக இயல்பாக திரைக்கு எடுத்து வந்திருக்கிறார். இது அவரது சிறந்த நடிப்புகளில் ஒன்றாக நினைவில் நிற்கும். அரசி பெனிலோபேவாக அன் ஹாதவே, காத்திருப்பின் வலியையும் உறுதியையும் மிகுந்த உணர்வுபூர்வமாகக் கடத்துகிறார். தந்தையைத் தேடி அலையும் டெலெமக்கஸாக டாம் ஹாலண்டும் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாகத் திகழ்கிறார்.
இவர்களுடன் ஜெண்டயா, எலியட் பேஜ், ஜான் பெர்ன்தால், லூபிடா நியோங்’ஓ, சார்லிஸ் தேரான் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் தங்களுக்கான இடத்தைச் சிறப்பாக நிரப்புகின்றனர். வில்லத்தனமான கதாபாத்திரத்தில் வரும் ராபர்ட் பேட்டின்சனின் நடிப்பும் குறிப்பிடும் படியானதாக இருக்கிறது. ஒடிசியஸின் மீது அசைக்க முடியாத விசுவாசம் கொண்டிருந்தாலும், காலப்போக்கில் விரக்தியடையும் தளபதியாக ஹிமேஷ் படேலும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, செர்சியாக வரும் சமந்தா மோர்டன் சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கிறார்.