சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டுவரும் நோக்கில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பல்வேறு கறார் முடிவுகளை எடுத்துவரும் கட்சித் தலைமை, `செந்தில் பாலாஜி”க்கு மட்டும் சில ஆஃபர்களை கொடுத்திருப்பதால் கொதிப்படைந்திருக்கிறார்கள் சீனியர்கள் பலர்.
அமைப்புரீதியாக மிகப்பெரிய மாற்றங்களுக்குத் தயாராகிறது தி.மு.க. கட்சியை 110 மாவட்டங்களாகப் பிரித்ததோடு, நிர்வாகப் பதவிகளுக்கு வயது உச்ச வரம்பையும் விதித்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். உட்கட்சித் தேர்தல் மூலமாக நிர்வாகிகளைத் தேர்வுசெய்யவும் முடிவெடுத்திருக்கிறார்.
‘மறுசீரமைப்பு எங்களுக்கு சாதகமாக இல்லை’ என ஒருசில சீனியர்கள் முகம்சுழிக்க ‘கட்சிக்காக நீங்க இத ஏத்துக்கணும்’ என கறார் காட்டியிருக்கிறார். அதுவே செந்தில் பாலாஜியிடம் மட்டும் தி.மு.க தலைமை நெகிழ்வுத் தன்மையுடன் நடந்துகொள்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.