Cricket
oi-Yogeshwaran Moorthi
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு துணைக் கேப்டன் திலக் வர்மாவின் மோசமான பேட்டிங்கே காரணம் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அயர்லாந்து அணியிடம் முதல்முறையாக இந்திய அணி தோல்வி அடைந்திருக்கிறது. இதனால் அயர்லாந்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனால் டி20 உலகக்கோப்பை வென்ற பின் விளையாடும் முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வி அடைந்திருக்கிறது.

இதனால் இந்திய அணி ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களே காரணமாக அமைந்துள்ளனர். தொடக்க வீரர் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மூவருமே அட்டாக் செய்ய முயன்று விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
ஆனால் இந்திய டி20 அணியின் துணைக் கேப்டன் திலக் வர்மா 21 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்தப் ஆட்டத்தின் திருப்புமுனையாக திலக் வர்மா விக்கெட் அமைந்துள்ளது. ஏற்கனவே திலக் வர்மா மிடில் ஆர்டரில் ரன்கள் சேர்ப்பது எப்படி என்று தெரியாமல் திண்டாடி வருகிறார்.
இவரை நம்பர் 5 பேட்ஸ்மேனாக இந்திய டி20 அணியில் களமிறக்குவது கூடுதல் சிக்கலை உருவாக்கக் கூடும். அதேபோல் கவுதம் கம்பீரும் வாஷிங்டன் சுந்தரை முன் கூட்டியே களமிறக்கி தவறு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அவரால் லோயர் மிடில் ஆர்டரில் நன்றாகவே ரன்கள் சேர்க்க முடியும். அவரை அதிரடியாக விளையாட களமிறக்கியதும் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
அதேபோல் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அயர்லாந்து அணி தானே என்று கொஞ்சம் சாதாரண உடல்மொழியுடன் விளையாடினர். ஆனால் அயர்லாந்து அணி ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. இதனால் அடுத்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.