தூக்கத்தில் தூக்கிப் போடும் இந்த உணர்வு ஏற்படுவதற்கான சரியான காரணத்தை இதுவரை எந்த மருத்துவ ஆய்வும் கண்டுபிடிக்கவில்லை. தூங்கும்போது நம் உடல் தசைகள் நன்கு தளர்ந்த நிலையில் இருக்கும்.
அப்படித் தசைகள் தளர்ந்திருக்கும்போது, மூளையானது, ‘சம்பந்தப்பட்ட நபர் கீழே விழப்போகிறார்… எழுந்திரு’ என்பது போல கட்டளையிடுகிறது. அதன் பிறகுதான் நாம் திடுக்கிட்டு எழுந்திருப்போம்.
இப்படித்தான் மருத்துவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதாவது தசைகளின் தளர்வை மூளையானது தவறாகப் புரிந்துகொண்டு கட்டளையிடுவதன் விளைவுதான் இது.
தூக்கத்தில் திடுக்கிட்டு எழுந்திருப்பது, தூக்கிப் போடுவது போன்ற இத்தகைய செயல்களை சில விஷயங்கள் அதிகப்படுத்தலாம். அதாவது, தூங்கச் செல்வதற்கு முன் அதிகமாக உடற்பயிற்சிகள் செய்வது, தூங்கப் போவதற்கு முன் அதிகம் காபி குடிப்பது, மன அழுத்தம், படபடப்பு அதிகமிருப்பது போன்றவை காரணமாக, தூக்கத்தில் திடுக்கிட்டு, தூக்கிப்போட்டு எழுந்திருப்பது நடக்கும். இதையெல்லாம் தவிர்த்தாலே போதும்.
இவற்றைத் தாண்டி, இன்னொரு விஷயத்தில் கவனம் தேவை. அது வலிப்பு நோய். சிலருக்கு தூக்கத்தில்கூட வலிப்பு நோய் வரலாம். அதனால் நாக்கைக் கடித்துக்கொண்டு, ரத்தம்கூட வரலாம். நுரை தள்ளும்… தரையில் படுத்திருக்கும்போது வலிப்பு வந்திருந்தால் உராய்வு, சிராய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். சிலர் சிறுநீர், மலம் கழித்திருக்கலாம். இப்படி ஏதேனும் நடந்திருந்தால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.
‘ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்’ (Restless Leg Syndrome) என்றொரு நிலை உண்டு. இந்த பாதிப்பு உள்ளவர்கள் கால்களை ஆட்டிக்கொண்டோ, நீட்டி மடக்கிக் கொண்டோ இருப்பார்கள். பீரியாடிக் லிம்ப் மூவ்வெமன்ட் ஆஃப் ஸ்லீப்’ (Periodic Limb Movements of Sleep) என்ற நிலையில் சிலர், இரவு முழுவதும் கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள்.
இதனால் பக்கத்தில் படுத்திருப்போருக்குத்தான் பிரச்னையே தவிர, சம்பந்தப்பட்ட நபருக்கு ஆபத்து இல்லை. இந்த இரண்டு பாதிப்புகளும் சம்பந்தப்பட்டவரை தொந்தரவு செய்தால் மருத்துவரை அணுகலாம். மற்றபடி, எப்போதாவது தூக்கத்தில் தூக்கிப்போடுவது மட்டும் இருந்தால், அதற்காக மருத்துவரைப் பார்க்க வேண்டியதில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.