Tamilnadu
oi-Vignesh Selvaraj
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அயன்ராஜாபட்டி கிராமத்தில் பாலாஜி பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 26 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள அயன்ராஜாபுரத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆலையில் சனிக்கிழமை பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. முதற்கட்ட தகவலின்படி, பட்டாசு ஆலையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் அப்பகுதி முழுவதும் அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து தீ வேகமாகப் பரவியதால் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் அச்சமடைந்து வெளியேறினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீட்புப் பணி சிறிது நேரம் தாமதமானது.
இதனையடுத்து தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடிவிபத்தில் சிக்கி நத்தத்துப்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த 26 பேரில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீசாரும் வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே முழுமையான விசாரணைக்குப் பிறகே இந்த வெடி விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.