தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள்.
இந்தக் கிராமத்தில், மே 29-ம் தேதி மாலையில் மூன்று இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல், கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக வெட்டினர்.
அதனால் கிராமத்து மக்கள் அலறியடித்தபடி வீட்டுக்குள் ஓடித் தப்பினார்கள். இருப்பினும், நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பேருக்குப் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.
அதன் பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மானூர் வழியாகத் தப்பிச் செல்கையில், நெல்லை மாவட்டம் தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இந்தக் கும்பலின் கொடூரத் தாக்குதலில் 8 பேருக்குப் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. அவர்களில் 4 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பட்டியல் சமூக மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த நெட்டூர் கிராம மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து துரித நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், குற்றச்சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் 8 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
சுட்டுப் பிடித்த போலீஸ்!
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் நடந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர்.
அதன்படி காட்டுப்பகுதிக்குள் பதுங்கி இருந்த மூவரை ட்ரோன் மூலம் கண்டறிந்த போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்து நேற்று கைது செய்தனர். அரிவாள் வெட்டு சம்பவத்தில் மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்ததால், அவர்களை தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.