“தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 'El Nino' தீவிரம் அடைய வாய்ப்பு" – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Spread the love

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் ‘எல் நினோ’ (El Nino) காலநிலை மாற்றம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில், இந்த எல் நினோ நிகழ்வு மேலும் வலுவடையக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஜூன் 2026-க்கான ‘என்சோ’ (ENSO) மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) அறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில், “பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை கணிசமாக உயர்ந்து எல் நினோவிற்கான எல்லையைத் தாண்டியுள்ளது. கடல் வெப்பமயமாதலுக்கு ஏற்ப வளிமண்டலத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், கடலும் வளிமண்டலமும் இணைந்த ஒட்டுமொத்த அமைப்பும் இப்போது ‘எல் நினோ’ நிலைக்கு மாறியுள்ளது.

வெப்பம்
வெப்பம்

பசிபிக் பெருங்கடலின் மத்திய வெப்ப மண்டலப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த ஜூன் மாதத்தில் எல் நினோ வரம்பை விட அதிகரித்துள்ளது. இந்த நிகழ்வைக் கண்காணிப்பதற்கான முக்கியக் குறியீடான ‘நினோ 3.4’ (Nino 3.4)-ன் மூன்று மாத சராசரி அளவு +0.5°C-க்கு மேல் உயர்ந்துள்ளது.

மேலும், கடலின் ஆழமான பகுதிகளிலும் அதிக வெப்பநிலை பதிவாகியிருப்பதால், வரும் மாதங்களில் வெப்பமான நீர் மேலே வந்து எல் நினோவை மேலும் வலுப்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, எல் நினோ காலக்கட்டம் இந்தியாவிற்குச் சாதகமற்ற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இது தென்மேற்கு பருவமழை குறைவதற்கும், வழக்கத்தை விட அதிக வெப்பநிலை பதிவாவதற்கும், நீண்ட வறண்ட கால நிலை மற்றும் சில பகுதிகளில் வறட்சி ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். இருப்பினும், இந்தியாவின் பருவமழையைத் தீர்மானிக்கும் ஒரே காரணி எல் நினோ மட்டுமல்ல என்பதும் இங்கு குறிப்பிடதக்கது.

தற்போது இந்தியப் பெருங்கடலில் நடுநிலையான (Neutral IOD) சூழலே நிலவுகிறது. இதனால் இது எல் நினோவின் தாக்கத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யாது. ஆனால், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) ஜூன் 11 அன்று வெளியிட்ட அறிக்கையில் ஒரு சாதகமான அம்சத்தைக் குறிப்பிட்டுள்ளது.

வெப்பம்..!

ஜூலை மாதவாக்கில் இந்தியப் பெருங்கடலில் ‘நேர்மறை இருமுனை’ (Positive IOD) சூழல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது எல் நினோவினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவக்கூடும் என்றும் கணித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் மாறிவரும் இந்தச் சூழலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். பருவமழைக் காலம் முடியும் வரை மாதந்தோறும் இதுகுறித்த புதிய தகவல்கள் வெளியிடப்படும்” என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *