இயக்குநர் சசி, “‘பூ’ திரைப்படத்தை எடுத்து முடித்த பிறகு 2008-ல் மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியைச் சந்தித்தேன்.
அப்போது அவர் என்னிடம், ‘சசி, நீங்கள் சொந்த வீடு வாங்கிவிட்டீர்களா?’ எனக் கேட்டார். அப்போது நான் வாடகை வீட்டில்தான் இருந்தேன். ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியால்தான் நான் சொந்தவீடு வாங்கினேன்.
மீண்டும் அவர், ‘ஏன், இன்னும் நீங்கள் வீடு வாங்கவில்லை?’ எனக் கேட்டார். நான் அவரிடம், ‘நான் ஹீரோவை வைத்துப் படம் பண்ணமாட்டேன். நான் கதைக்குள் இருக்கும் விஷயங்களைத்தான் யோசிப்பேன்.
அதிலிருக்கும் ஹீரோயிச விஷயங்கள் பற்றி நான் யோசிக்கமாட்டேன்,’ என்றேன். இப்படியான ஒரு எண்ணத்தில்தான் நான் அப்போது இருந்தேன். ஆனால், இப்போது அப்படி இல்லை.

பிறகு அவரிடம், ‘ஹீரோவை வைத்துப் படம் பண்ணுவதற்கு எனக்கு வரவில்லை’ என்றேன். அவர், ‘இல்லை. ஹீரோயிசம் தவறு என்கிற எண்ணம் உங்களுக்குள் இருக்கிறது. அப்படி கிடையாது.
தென்னாப்பிரிக்காவில் காந்தியைத் தள்ளிவிட்டபோது, அவர் எழுந்து நிற்கிறார். அதுவொரு ஹீரோயிசம். இப்படிப் பல இடங்களில் ஹீரோயிசம் இருக்கின்றன.
ஆனால், எது ஹீரோயிசம் என்பதில் வேறுபாடு இருக்கிறது. ஹீரோயிசத்தை வளர்த்தெடுப்பதில் தவறில்லை. ஆனால், அதில் பொய் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,’ என என்னிடம் அவர் சொன்னார். இதன் பிறகு நான் ஹீரோயிசம் பற்றியே யோசிக்கத் தொடங்கினேன்” என்றார்.