தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் சாயும் சரத் பவார்? – மகளுடன் சென்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Spread the love

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சமீப காலமாக நாடாளுமன்றத்தில் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மசோதாவைக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இதற்காக மூன்றில் இரண்டு பங்கு எம்.பி-க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. இதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து கணிசமான எம்.பி-க்களை தங்களது பக்கம் இழுத்துக் கொண்டு வந்துவிட்டனர். இப்போது சரத் பவாரிடம் இருக்கும் எட்டு எம்.பி-க்களுக்கு பா.ஜ.க குறிவைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சரத் பவார் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேயும் கலந்து கொண்டார். சரத் பவாரை பிரதமர் நரேந்திர மோடி வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

அதோடு இருவரும் எதையோ பேசி சிரித்துக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. நரேந்திர மோடியிடம் சரத் பவார் விவசாயிகள் பிரச்னை தொடர்பான கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை கொடுத்தார். அதோடு தேசியவாத காங்கிரஸின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாகவும் பேசியதாகத் தெரிகிறது.

கடந்த வாரம் மும்பையில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் மறைந்த அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அதோடு இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சரத் பவார் மகள் சுப்ரியா சுலே, “மத்திய அரசு மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கொண்டு வருவதாக இருந்தால், தொகுதி எல்லை மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஆதரவு கொடுப்பது குறித்து எங்களது கட்சி பரிசீலிக்கும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதேசமயம் தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவினரும் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து, ஒன்றிணைய வேண்டும் என்று பா.ஜ.க கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி ஒன்று சேர்ந்தால் இரு அணியைச் சேர்ந்த தலா ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் பா.ஜ.க தெரிவித்துள்ளது. ஆனால் இரு அணிகளின் இணைப்புக்கு அஜித் பவார் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால் சரத் பவார் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று அஜித் பவார் குடும்பம் அச்சம் அடைந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *