
தமிழக அரசியல் வரலாற்றில் த.வெ.க. இடம்பிடித்துவிட்டதை ஜீரணிக்க முடியாமல் தி.மு.க. தவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியின் மகள் கயல்விழி தவெகவுக்கு ஆதரவாக களமிறங்கியிருந்தது, கருணாநிதியின் ரத்த உறவுகளை கொதிநிலைக்கு கொண்டுசென்றிருந்தது.
இதனிடையே, திமுகவில் கயல்விழிக்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற நிலையில், அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் அதிமுக மற்றும் தவெக பக்கம் நகரத் தொடங்கினர். மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற கார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் அழகிரி ஆதரவு பின்னணியைக் கொண்டவர்கள் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் கயல்விழியும் தவெகவில் இணைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிகிறது. முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதுடன், தலைமைச் செயலகத்திற்குச் சென்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியது இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
ஆனால், கட்சியில் இணைவதற்கு முன் கயல்விழி மதுரை மாநகராட்சி மேயர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் தவெக தலைமையில் அதிர்ச்சி ஏற்பட்டதாக தகவல். கட்சியில் இணையும் நபர்களுக்கு உடனடியாக பதவி உறுதி அளிக்க முடியாது என்றும், நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கே முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் விஜய் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிகிறது.
இதன் பின்னணியில், மதுரையில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளரான மருதுபாண்டியனை மேயர் வேட்பாளராக முன்னிறுத்த அவர் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கயல்விழிக்கு கல்தா கொடுத்துள்ள தவெக தலைமையின் மீது அப்செட்டில் இருப்பதாகவும், இப்போது திமுக பக்கம் போகலாமா? அல்லது பதவியே இல்லாமல் தவெகவில் இணையலாமா? என்ற யோசனையில் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.