2024-ம் ஆண்டுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்ததில் இந்த முறை 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதில் “ப்ளூ’ என்ற குறும்படத்தின் ஒலி வடிவமைப்புக்கு (டி.எஸ்.ஹரிஹரசுதன்) கிடைத்திருக்கிறது. இந்நிலையில் ‘ப்ளூ’ படத்தின் இயக்குநரான பிரவீன் குமாரிடம் பேசினோம்.
“இந்தக் குறும்படத்தை எடுக்கும்போது இதை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கணும்னு நினைச்சது கிடையாது. சினிமா பண்றது அவ்வளவு எளிதானது கிடையாது. கமர்ஷியலாக இருக்கணும். ஹீரோவை மனசுல வச்சு சீன்கள் எழுதணும், ஆடியன்ஸ் பல்ஸ் தெரிஞ்சிருக்கணும். இப்படி பல விஷயங்கள் இருக்கும். ஆனா, குறும்படம் பண்றது அப்படியில்லை. மனசுல தோணின எதையும் பத்து நிமிஷத்துக்குள் சொல்லிட முடியும். இதுல அவ்வளவு சுதந்திரம் இருக்கு. உணர்வுப்பூர்வமா ஒரு விஷயத்தைச் சொல்லலாம்னு நினைச்சு, இயக்கின படம்தான் ‘ப்ளூ’.

ஷார்ட் ஃபிலிம் தானேனு எளிதா இறங்கிட்டோம். ஒரு கட்டத்துல எடுத்து முடிச்சா போதும்னு தோண வச்சிடுச்சு. அவ்வளவு சிரமங்கள். ஏன்னா, கடலுக்குள் ஷூட் பண்ணும். படகுனு பல விஷயங்கள் இருந்தது. அதனால நல்ல படியாக எடுத்து முடிச்சிடணும்னு நினைச்சோம். ஒரு பெரியவருக்கும், சின்னப் பையனுக்கும் இடையே நடக்கற விஷயங்கள்தான் கதை லைன்.
ஒரு சின்னப்பையன் கடலுக்குள் போகணும்னு ஆசைப்பட்டு, ஒரு படகுக்காரர்கிட்ட, ‘என்னை கடலுக்குள் அழைச்சிட்டு போங்க’னு கேட்டுக்கிட்டே இருக்கான். இவன் ரொம்ப தொல்லை பண்றானேனு எண்ணிய படகுக்காரர் அவனை கடலுக்குள் அழைச்சிட்டு போறார். அதன் பின் நடக்கற சம்பவங்கள் மீதிக்கதை.

பத்து நிமிஷத்துக்குள் இதைச் சொல்றது சவால்தான். ஆனாலும் நினைச்சதைச் சொல்லிட்டோம். அந்தச் சின்னப் பையன் மாதிரிதான் கடலுக்குள் போறதுக்கு நாங்களும் கஷ்டப்பட்டோம். படகு எளிதாக கிடைக்கலை. அப்படி சூழல்லேயும் ஒரே நாள்ல படமாக்கினோம். அதைப் போல இதுல பெரியவரா நடிச்ச பழனியும், சிறுவன் ஹேமநாதனும் நாடக நடிகர்கள்.
தவிர, பழனியண்ணா சில படங்கள்லேயும் நடிச்சிருக்கார். ‘மெட் ராஸ்’, ‘மாவீரன்’ படங்கள்ல கவனம் ஈர்த்திருப்பார். ‘மாவீரன்’ல நான் வேலை செய்யும் போதுதான் அவர் நட்பு கிடைச்சது. இந்தப் படத்துல நடிச்சதுக்கு அவர் பணமே வாங்கிக்கல. அப்படியொரு நல்ல மனசுக்காரர் அவர். சிறுவன் ஹேமநாதன், இப்ப ‘டேப்லட்’ங்கற குறும்படத்துல நடிச்சிருக்கார்.
அதுவும் விருதுக்காக அனுப்பி வச்சிருக்காங்க. இந்தப் படத்தை எண்ணூர் கடல்லதான் ஷூட் செய்தோம். அன்னிக்கு மொத்தமாகவே 15 ஆயிர ரூபாய்யில ஒரே நாள்ல ஷூட் செய்தது பெரிய விஷயமா பாக்கறேன்.

என்னோட பூர்வீகம் திருத்தணினாலு, தஞ்சாவூரில்தான் எம்.டெக்.சிவில் என்ஜீனியரிங் படிச்சு முடிச்சேன். கல்லூரி முடிச்சதும் படிப்பு தொடர்பான வேலையில் சேரலாம்னு நினைச்சேன். அந்தச் சமயத்துல தான் வெற்றிமாறன் சார் இயக்கிய ‘ஆடுகளம்’ படம் ஆறு தேசிய விருதுகள் குவிச்சிருந்தது. நானும் டைரக்டர் ஆகி, என் படமும் இப்படி விருதுகள் வாங்கணும்னு விரும்பினேன்.
அப்புறம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தைப் பார்த்த பிறகு நிச்சயம் டைரக்ஷன்ல இறங்கலாம்னு எனக்குள் ஒரு பெரிய நம்பிக்கை வந்தது. இங்கே ‘மாவீரன்’ படத்தின் முதன்மை உதவி இயக்குநராக வேலை செய்திருக்கேன். அந்த அனுபவத்தோடு ஒரு குறும்படத்துக்குள் இறங்கினேன். ஆனா, சினிமாவுல ஒரு பெரிய படத்துல வேலை செய்திருந்தாலும், குறும்படம் இயக்கும் போது கண்ணைக்கட்டி காட்டுல விட்டது மாதிரிதான் இருந்தது.
இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்ததுக்கு இதன் படத்தொகுப்பாளர் தமிழ் சக்திவேலும், இதைத் தயாரிச்சிருக்கும் எடிட்டர் பிலோமின் ராஜ் சாரும்தான் காரணம்.

‘ப்ளூ’வைப் படமாக்கி முடிச்சதும் நிறைய பேர்கிட்ட போட்டு காண்பிச்சேன். எல்லோரும் ‘ரொம்ப சூப்பரா இருக்கு..’னு சொல்வாங்கனு எதிர்பார்த்தேன். ஆனா, ‘ஓகேதான்’ங்கற ரேஞ்சுல சொன்னாங்க. ஆனா, எனக்கு அந்தப் பாராட்டு போதுமானதா இல்லை. இவ்வளவு சிரமப்பட்டு எடுத்த படம் இன்னும் கவனம் பெறணும்னு தொடர்ச்சியா ஃபிலிம் ஃபெஸ்டிவல்களுக்கு அனுப்ப ஆரம்பிச்சேன்.
கோவா, ரஷ்யா திரைப்பட விழாக்கள்ல ‘ப்ளூ’ திரையிடலுக்குத் தேர்வாகி, வாழ்க்கையில முதல் முறையாக விமானத்துல பயணிச்சேன். வெளிநாடு போயிட்டு வந்தேன். அப்புறம் தேசிய விருதுக்கு அனுப்பி வச்சேன். சிறந்த ஒலி வடிவமைப்புக்காக இந்த விருது ஹரிஹரசுதனுக்குக் கிடைச்ச பிறகுதான் அவருக்கே நான் தேசிய விருதுக்கு அனுப்பி வச்சிருந்த தகவல் தெரியும்.
மருனின் ஒளிப்பதிவு, பிரேவேகாவின் இசை என எல்லாமே பக்க பலமாக இருந்தாலும், இந்தப் படத்தில் ஒலி வடிவமைப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனாலதான் அதுக்கு விருது கிடைச்சிருக்கு. சுதனுக்குக் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்” என்கிறார் இயக்குநர் பிரவீன் குமார்.