தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு? மாறிய நிலைப்பாட்டின் பின்னணி என்ன? | Delimitation Bill: Why Is DMK Softening Its Stance Now

Spread the love

பாஜக தலைமையிலான மத்திய அரசு மீண்டும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதா தொடர்பாக திமுக தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை வெளிப்படுத்தியிருப்பது தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இதே மசோதாவை திமுக கடுமையாக எதிர்த்திருந்தது. அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், “தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் கருப்புச் சட்டம்” என்று விமர்சித்திருந்தார்.

மேலும், மசோதா நிறைவேற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்துவோம் என்றும் திமுக அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது, தொகுதி மறுவரையறை மசோதாவின் இறுதி வடிவம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

இந்த முடிவு, மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

“தமிழக நலன் பாதுகாக்கப்பட்டால் எதிர்க்கத் தேவையில்லை”

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறுகையில், “மசோதாவின் உள்ளடக்கத்தைப் பார்த்த பிறகே கட்சியின் இறுதி நிலைப்பாடு முடிவு செய்யப்படும். திமுக முன்வைத்துள்ள பரிந்துரைகள் மற்றும் தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படும் வகையில் மசோதாவில் இடம் பெற்றிருந்தால், அதை எதிர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஆனால் தென் மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படும் வகையில் இருந்தால் தொடர்ந்து எதிர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், மசோதாவுக்கு திமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இல்லாமல், “உள்ளடக்கத்தைப் பொறுத்து முடிவு” என்ற புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *