தொகுதி மறுவரையறை: “மோடியும், அமித்ஷாவும், RSS அமைப்பும் போடும் கணக்கு" – அமைச்சர் விஸ்வநாதன்

Spread the love

தொகுதி மறுவரையறைத் திட்டத்தின் ஆபத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நேற்று (12-ம் தேதி) வடசென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. அந்தப் பேரணிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஸ்வநாதன், “சட்டமன்றத்தில் தவெக, காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான திமுக ஆகிய அனைத்துக் கட்சிகளும் இணைந்து தொகுதி மறுவரையறையை எதிர்த்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன. தமிழக முதலமைச்சர் கொண்டுவந்துள்ள இந்தத் தனித் தீர்மானம் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு கொண்டுவரப்பட்ட முக்கிய நடவடிக்கையாகும்.

மோடி, அமித் ஷா, பா.ஜ.க Amit Shah, modi
மோடி, அமித் ஷா, பா.ஜ.க Amit Shah, modi

தென்மாநிலங்களில் பாஜகவின் திட்டம் வெற்றிபெறாது. தமிழகத்தில் இடங்களின் எண்ணிக்கை 40-லிருந்து 60 ஆக உயரும் என்று கூறினாலும், உத்திரப் பிரதேசத்தில் 80 ஆக இருக்கும் தொகுதிகள் 120 ஆக உயர்த்தப்படும் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் போன்ற ஐந்து பெரிய ஹிந்தி பேசும் மாநிலங்களில் பெரும்பான்மையைப் பிடித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்பதுதான் மோடியும், அமித்ஷாவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் போடும் கணக்கு.

ஆனால், இந்த மந்திரக்கோல் மாயத் திட்டத்தில் ஏமாறுவதற்குத் தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை. பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காகவே இந்தத் தொகுதி மறுவரையறை சதித் திட்டத்தை மறைமுகமாகத் தயார் செய்து வருகிறது.

1971-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையிலேயே கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், இந்தத் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உத்தரவாகும். தற்போதைய நிலையில் உள்ள லோக்சபாவின் 543 உறுப்பினர்கள் மற்றும் ராஜ்யசபாவின் 240 உறுப்பினர்கள் எண்ணிக்கையே தொடர வேண்டும்.

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்
உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்

கூடுதலாக 20 தொகுதிகள் கிடைக்கிறது என்பதற்காகத் தமிழர்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். பெருந்தலைவர் காமராஜரும், தந்தை பெரியாரும் வாழ்ந்த இந்தப் பகுத்தறிவு பூமியில் உள்ள மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள். 40 அல்ல, 60 தொகுதிகள் கொடுத்தாலும் இதனை ஏற்க மாட்டோம். இன்னும் 25 ஆண்டுகளுக்கு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்பதே எங்களின் தெளிவான கருத்தாகும்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி நீக்கமும் ராஜினாமாவும் மாணவர்களால் ஏற்பட்ட மாபெரும் புரட்சியின் விளைவாகும். ராகுல் காந்தி தனிமனிதனாக நின்று நீட் தேர்வு எழுதும் ஒரு கோடி மாணவர்களுக்காகப் போராடினார். அந்தப் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து மாணவர்களின் புரட்சியாக வெடித்தது.

அந்த அழுத்தத்தின் காரணமாகவே தர்மேந்திர பிரதானின் பதவி காவு வாங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் போராட்டக் கூர்முனை என்றும் மழுங்காது, அது மேலும் கூர்தீட்டப்படும். ” என்றார். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கேள்விக்கு, சட்டமன்றத் தொடர் நிறைவடைந்த பிறகு, உரிய நேரத்தில் மற்றும் பொருத்தமான இடத்தில் இதற்கான பதில் அளிக்கப்படும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *