2030-ம் ஆண்டுக்குள் பாலின சமத்துவத்தை அடைய வேண்டும் என்ற உலகளாவிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய முன்னேற்ற வேகத்தின்படி பார்த்தால் அந்த இலக்கு 2197-ம் ஆண்டில்தான் சாத்தியமாகும் என ஐ.நா.வின் சமீபத்திய ‘Gender Snapshot’ அறிக்கை எச்சரித்துள்ளது. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் பொருளாதார உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2030 இலக்கு… எங்கு நிற்கிறது நிலை?
ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளில்(SDG) ஐந்தாவது இலக்கு, பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சம உரிமை மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்வதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், 2030-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட எந்த முக்கியக் குறியீடும் உலக அளவில் இலக்கை எட்டும் பாதையில் இல்லை என அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவது, வன்முறையைத் தடுப்பது, அரசியல் மற்றும் முடிவெக்கும் துறைகளில் பங்களிப்பை அதிகரிப்பது, பொருளாதார மற்றும் சொத்து உரிமைகளை உறுதி செய்வது போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கி இருந்தாலும், களத்தில் முன்னேற்றம் மிகவும் குறைவாகவே உள்ளது.
அரசியலில் இன்னும் தொடரும் ஆண்கள் ஆதிக்கம்
நடப்பு ஆண்டில் உலக நாடுகளின் தேசிய நாடாளுமன்றங்களின் கீழவை அல்லது ஒற்றை அவைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 27.4 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. கடந்த 2015-ல் இது 22.3 சதவிகிதமாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளின் இந்த மெதுவான முன்னேற்ற வேகம் தொடர்ந்தால், நாடாளுமன்றங்களில் முழுமையான பாலின சமத்துவத்தை அடைய 2064 வரை ஆகலாம் என ஐ.நா. கணித்துள்ளது.
அதேபோல், உலகளவில் தேசிய அமைச்சரவைகளில் பெண்களின் பங்கு 22.4 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. நாடாளுமன்றத் தலைவர்களாகப் பொறுப்பு வகிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் 19.9 சதவிகிதமாக குறைவான நிலையிலேயே தொடர்கிறது.