’தொழில்துறை அமைச்சரை கூட அழைக்காமல் முதலமைச்சர் இங்கிலாந்து சென்றது ஏன்?’ – பெ.சண்முகம் கேள்வி!

Spread the love

கோவை பீளமேடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஆட்சிக் காலங்களிலும் இதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் பொருத்தமான இடமல்ல. இதனால் அப்பகுதி மீனவர்கள் அப்புறப்படுத்தப்படுவதோடு, அவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் போன்ற இடங்களில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க வேண்டும்.

வழக்கமாக சட்டமன்ற உறுப்பினர் மறைவினால் தான் இடைத்தேர்தல் வரும். ஆனால், இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 20 நாட்களுக்குள் கட்சி மாறி, பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்ததன் விளைவாகவே இது ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்ட நிலையில், இதனை எதிர்கொண்டாக வேண்டும். அதன்படி, இடதுசாரி கட்சிகள் இணைந்து மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. மக்கள் நலனை முன்னிறுத்தி களம் காணும் மாற்று சக்தியான இடதுசாரி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். ‘தமிழகம் இனி இடது பக்கம்’ என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம்.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

த.வெ.க தலைமையிலான கூட்டணியிலோ அல்லது அமைச்சரவையிலோ இடதுசாரிகள் இடம்பெறவில்லை என்பதை தொடக்கத்திலேயே தெளிவுபடுத்திவிட்டோம். அன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்பவே தேர்தல் கூட்டணிகள் அமையும். காலம் முழுவதும் ஒரே நிலைப்பாட்டில் எந்தக் கட்சியும் இருக்க முடியாது. இத்தேர்தலில் ஆளும் அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோதப் போக்குகள் குறித்துப் பேசுவோம். தி.மு.க ஆட்சியில் கடுமையாக எதிர்க்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் மசோதாவை, தற்போதைய அரசு கடைசி நாளில் அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது கண்டிக்கத்தக்கது.

பெண்களை அவதூறாகப் பேசுவோர் மீது அந்தந்தக் கட்சிகளின் தலைமை கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்காகத் தொழில்துறை அமைச்சரைக் கூட அழைத்துச் செல்லாமல், முதலமைச்சர் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். நூறு நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக அரசு கூறினாலும், எந்தெந்த நிறுவனங்கள், எத்தகைய உற்பத்தி, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு என்ற எந்த விவரமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. அந்நிய மூலதனத்தை மட்டுமே நம்பியிராமல் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *