தோனியின் ஓடும் வேகம் இப்போது கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. காயத்தினால் ஓடுவதில்தான் தோனி அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தார். தோனியின் பேட்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் எந்த பாதிப்பும் இல்லை. டெத் ஓவர்களில்தான் தோனி இறங்குவார். அதனால் வேகமாக ஒன்றிரண்டு ரன்களை ஓடி எடுக்க வேண்டும். காயத்திலிருந்து முழுமையாக குணமாகிவிட்டோம் என்கிற நம்பிக்கை தோனிக்கே வரும்போதுதான் அவர் எங்களிடம் வருவார். நான் விளையாட தயாராக இருக்கிறேன் என கூறுவார். அணியும் ரசிகர்களும் ஏன் ஒட்டுமொத்த சென்னையுமே அவருக்காக காத்திருக்கிறது’ என்றார்.
தோனி எந்தப் போட்டிக்கும் மைதானத்துக்கு வருவதில்லையே? என்ற கேள்விக்கு,
‘தோனி எப்போதுமே அணியின் நலனை முன்னிலைப்படுத்துபவர். மைதானத்துக்கு வந்தால் ஒட்டுமொத்த கவனமும் அவர் மீதுதான் இருக்கும். கேமராக்கள் அவரையே அதிகமாக படம்பிடிக்கும். ரசிகர்களும் அவருக்காகவே ஆர்ப்பரிப்பார்கள். அணியின் மீதான கவனத்தை குறைப்பதைப் போல இருக்கும் அவற்றையெல்லாம் தோனி விரும்பவில்லை. இது சரியா தவறா என தெரியவில்லை. ஆனால், தோனி அப்படித்தான் நினைக்கிறார். ஆனாலும் பின்னால் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டேதான் இருக்கிறார்.
ட்ரெஸ்ஸிங் ரூமில் தன்னுடைய அனுபவத்தையும் கள அறிவையும் மற்ற வீரர்களுடன் பகிர்ந்துகொள்வதில் தோனி எப்போதுமே ஆர்வமாக இருப்பார். வீரர்களுடன் இணைந்து அத்தனை இணக்கமாக பயிற்சி செய்கிறார். ஒட்டுமொத்த அணிக்குமே தேவையான நம்பிக்கையை கொடுக்கிறார். அணியின் மீது விழும் கவனம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே போட்டிகளுக்கு மைதானத்துக்கு வருவதை தவிர்க்கிறார்’ என்றார்.