India
oi-Vigneshkumar
பாட்னா: பீகாரில் இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்ற நிலையில், வெற்றிக்கான காரணம் குறித்து அவர் மனம் திறந்துள்ளார். இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள பிரசாந்த் கிஷோர், இதை சாதாரணமாக அடக்கிவிட முடியாது என குறிப்பிட்டார். மேலும், தற்போதைய பாஜக பீகார் முதல்வரான சம்ராட் சவுத்ரியை மக்கள் இன்னும் ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பீகாரில் சமீபத்தில் நடந்த உள்கட்சி தேர்தலில் பாங்கிபூர் தொகுதியில் தேர்தல் ஆலோசகரும் ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பாஜக தேசிய தலைவரான நிதின் நபீன் கடந்த பல ஆண்டுகளாக தன்வசம் வைத்திருந்த தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றிருந்தது நாடு முழுக்க பேசுபொருளானது.

ஜன் சுராஜ்
இதற்கிடையே தனது தேர்தல் வெற்றி, இளைஞர்கள் போராட்டம் ஆகியவை குறித்து ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் ஜார்க்கண்டில் நடைபெற்ற போராட்டங்களையும் பாங்கிபூர், மத்தியப் பிரதேசத்தின் டாட்டியா இடைத்தேர்தல் முடிவுகளையும் தனித்தனியாக பார்க்க வேண்டும் என்றாலும், இவை அனைத்தும் ஒரு பெரிய பிரச்சினையை சுட்டிக்காட்டுவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “கல்வி நிறுவனங்களின் ஆதிக்கம், தேர்வு தாள் லீக் ஆகியவை மிக பெரிய பிரச்சினையாக மாறியுள்ளன. முன்பு வினாத்தாள் லீக் என்பது எப்போதாவது நடக்கும் சம்பவமாக இருந்தது. ஆனால் இப்போது தாள் லீக் இல்லாமல் தேர்வே நடப்பதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
அதிருப்தி
பொருளாதார தேக்கம், விவசாயத்தில் நிலவும் நெருக்கடி, கல்வி வணிகமயமாக்கல், ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை ஒரு பக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் ஏஐ காரணமாக ஒயிட் காலர் வேலைகள் இருக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. இவை இளைஞர்களிடையே ஆழமான அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ஜந்தர் மந்தரிலும், தற்போது ஜார்க்கண்டிலும் நாம் பார்த்தது இளைஞர்களின் இந்த அதிருப்தியின் வெளிப்பாடுதான். இதை சாதாரணமாக அடக்கிவிட முடியாது. கட்டமைப்பு ரீதியான அதிருப்தி இளைஞர்களிடையே உள்ளது” என்றார்.
பாங்கிபூரில் பாஜக தோற்றது ஏன்?
30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக வசம் இருந்த பாங்கிபூர் தொகுதியில் அக்கட்சி தோல்வியடைய இளைஞர் போராட்டம் காரணமில்லை.. மாறாக பீகார் முதல்வர் சம்ராட் சவுத்ரி தான் என்கிறார் பிரசாந்த் கிஷோர்! அவர் மேலும் கூறுகையில், “சம்ராட் சவுத்ரியை அனைத்து தரப்பு மக்களும் ஏற்கவில்லை. அவரது அரசியல் பின்னணி, கல்வி தகுதி மற்றும் ஆர்ஜேடியுடன் இருந்த தொடர்பு ஆகிய காரணங்களால் அவரை பாஜக தலைமையாக மக்கள் ஏற்க மறுக்கிறார்கள். முன்பு பாங்கிபூர் மக்கள் லாலு பிரசாத் எதிர்ப்பு என்ற அடிப்படையில் இதற்கு முன்பு பாஜகவுக்கு வாக்களித்தனர். இந்த முறை ஜன சுராஜ் கட்சி ஒரு நம்பகமான மாற்றாக தெரிந்ததால் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்” என்றார்.
இப்போது பாங்கிபூர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே தனது முக்கிய நோக்கம் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அவர் மேலும், “ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 5 கிலோ ரேஷன் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வேன். ரேஷன் அட்டை பெறுவதற்கு எந்தவொரு குடிமகனும் லஞ்சம் கொடுக்க வேண்டாத நிலையை உருவாக்குவேன். மேலும், உள்ளூர் அரசு பள்ளிகளின் கல்வி தரம் ஓராண்டுக்குள் மேம்படாவிட்டால், அந்த மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு மாற்றிவிடுவேன். இதற்கான செலவை ஜன சுராஜ் கட்சி ஏற்கும்.
வேலைவாய்ப்பு
பாங்கிபூரில் சுமார் 10,000 குடும்பங்களில் உள்ள நிலையில், குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்காவது வேலை கிடைப்பதை உறுதி செய்வேன். நான் அரசு வேலை தருவதாக வாக்குறுதி அளிக்கவில்லை. ஒவ்வொருவரின் கல்வி மற்றும் தொழில் திறனுக்கு ஏற்ற வேலைவாய்ப்பைப் பெற்று தருவதை உறுதி செய்வேன். ஒரு எம்எல்ஏ இதை சாதிக்க முடிந்தால், பீகாரில் உள்ள மற்ற 242 எம்எல்ஏக்களுக்கும் மிகப்பெரிய அழுத்தம் உருவாகும் பாங்கிபூரில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவேன். அதை செய்யத் தவறினால் மீண்டும் அவர்களிடம் வாக்கு கேட்க மாட்டேன். இதை செய்து காட்டிவிட்டு, பீகார் முழுக்க ஆதரவு தருமாறு கேட்பேன்” என்றார்.
பாஜக மற்றும் ஆர்ஜேடிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள ஜன சுராஜ் கட்சி எதிர்காலத்தில் அவர்களுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அவர், “கூட்டணி, ஒப்பந்தம் அல்லது அரசியல் டீல் என எந்த பெயரில் அழைத்தாலும், அவை மக்களுக்கு பயனளிக்காது என்பதையே பீகாரின் கடந்தகால அரசியல் நமக்கு காட்டுகிறது. பீகாரை மீண்டும் அறிவின் மையமாக மாற்ற வேண்டும். ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலைக்காக பீகாருக்கு வர தொடங்கும்போதுதான் உண்மையான வளர்ச்சியும் மாற்றமும் ஏற்பட்டுவிட்டதாக கூற முடியும்” என்றார்.


