International
oi-Vigneshkumar
மஸ்கட்: மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களில் இந்தியர்கள் இருக்கும் கப்பல்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடந்து வரும் சூழலில், இப்போது மீண்டும் இந்தியர்கள் இருந்த கப்பல் நடுக்கடலில் தத்தளிக்கிறது. அவர்களுக்கு என்ன நடந்தது.. இதன் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு இந்தியர்கள் இருக்கும் படகுகள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் இந்தியர்கள் மிகப் பெரிய சிக்கலில் தவித்து வருகிறார்கள். இதற்கிடையே மீண்டும் அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

என்ன நடந்தது
ஓமன் நாட்டின் கடற்கரைக்கு அருகே 14 இந்தியர்களுடன் சென்ற ஒரு சிறிய ரகப் படகு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென மூழ்கத் தொடங்கியது. நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியர்களைக் காப்பாற்ற அமெரிக்கக் கடற்படை, இந்திய கடற்படை இணைந்து ஒரு மிகப்பெரிய மீட்புப் பணியை மேற்கொண்டன. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இன்று ஜூன் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, ஓமனின் ராஸ் அல் ஹத் (Ras Al Hadd) பகுதிக்குக் கிழக்கே சுமார் 80 கடல் மைல் தொலைவில் ஒரு சிறிய ரகப் படகு ஆபத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அந்தப் படகில் 14 இந்தியர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். படகு மெல்ல மெல்லக் கடலில் மூழ்கத் தொடங்கியதால், அதில் இருந்தவர்கள் உயிருக்கு அஞ்சினர்.
அமெரிக்கக் கடற்படை
இந்தப் படகு விபத்தில் சிக்கியிருப்பதை முதலில் அமெரிக்க கடற்படை கண்டறிந்தது. அவர்கள் உடனடியாக இந்தியக் கடற்படைக்கும், ஓமன் நாட்டு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அமெரிக்க கடற்படையின் P-8 ரக கடல்சார் கண்காணிப்பு விமானம் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது. படகு மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அந்த விமானம், வானிலிருந்து ஒரு உயிர் காக்கும் படகைக் கடலில் போட்டது. படகில் இருந்த 14 இந்தியர்களும் உடனடியாக அந்த உயிர் காக்கும் படகிற்கு மாறினர். இதன் மூலம் அவர்கள் கடலில் மூழ்குவது தவிர்க்கப்பட்டது.
அமெரிக்க விமானம் மீட்புப் பணியை ஒருங்கிணைத்த அதே வேளையில், அந்தப் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த ‘எம்.வி. ஜபல் அலி 9’ (MV Jabal Ali 9) என்ற வணிகக் கப்பலை உதவிக்கு அழைத்தது. இந்தக் கப்பல் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் நாட்டின் கொடியுடன் பயணித்துக் கொண்டிருந்தது. ஓமனின் சோஹார் நகரிலிருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த இந்தக் கப்பல், அமெரிக்க விமானத்தின் வேண்டுகோளை ஏற்று உடனடியாகத் திசை மாறி விபத்து நடந்த இடத்திற்குச் சென்றது.
முக்கியம்
இந்த விபத்து நடந்த ஓமன் கடற்கரைப் பகுதி தற்போது சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது. இது உலகின் மிக முக்கியமான கடல் வழிப் பாதைகளில் ஒன்றாகும். உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் பெருமளவில் இந்தப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்த பாதையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகக் கப்பல் போக்குவரத்து ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக இந்தப் பகுதியில் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் கப்பல்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சர்வதேச கடற்படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. அப்படிக் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தபோதே இந்தியர்கள் இருந்த படகு ஆபத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியர்கள் நிலை
மீட்கப்பட்ட 14 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர்களின் உடல்நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அந்தப் படகு ஏன் மூழ்கியது என்பதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை சுமார் 20,000 மாலுமிகள் இந்தப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.