Tamilnadu
oi-Halley Karthik
சிவகங்கை: நள்ளிரவு நேரத்தில் மலையாள திரைப்பட நடிகர் மம்முட்டியும் அவரது குழுவினரும் வழி தெரியாமல் சிக்கி தவிக்க, சரியான நேரத்தில் தமிழர் ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டி உதவியிருக்கிறார்.
சினிமா படப்பிடிப்புக்காக மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குழுவினர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்திருக்கின்றனர். எதிர்பார்த்தபடி படப்பிடிப்பு சிறப்பாக நிறைவடைந்திருக்கிறது. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு.. நள்ளிரவில் மம்முட்டி & டீம் கிளம்பியிருக்கின்றனர்.

காரைக்குடியிலிருந்து கேரளாவுக்கு போக வேண்டும். இரண்டு வழிகள் இருக்கின்றன. திருப்பத்தூர் வழியாக மேலூர் போய்.. அங்கிருந்து வத்தலகுண்டு, தேனி வழியாக கேரளா போகலாம். இல்லையெனில் கொட்டாம்பட்டி, நத்தம் வழியாகவும் கேரளாவுக்கு போகலாம். ஆனால், மேலூர் வழியில் சாலை பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே கூகுள் மேப் பார்த்து சென்ற மம்முட்டி & டீம், சரியான வழியில் போக முடியாமல் சிக்கி தவித்தனர்.
ஒரு கட்டத்தில் கூகுள் மேப்பை நம்பினால் வீடு போய் சேர முடியாது என்று உணர்ந்த அவர்கள்.. திருப்பத்தூரில் பெட்ரோல் பங்கில் ஒருவரிடம் உதவி கேட்டனர். அப்போது மணி விடியற்காலை 3.30. இருப்பினும் உதவி கேட்ட இளைஞர்.. தனது பைக்கை பின்தொடருமாறு கூறி அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். பைக் 10 கி.மீ-ஐ தாண்டி பயணித்திருக்கிறது. பின்னர் மம்முட்டி & டீம் மெயின் ரோட்டை பிடித்திருக்கின்றனர். ஒரே ரோடு.. நேராக போனால் கேரளாவுக்கு போய்விடலாம் என்று அந்த இளைஞர் வழி காட்டியிருக்கிறார்.
இந்த நேரத்தில்.. இவ்வளவு தூரம் மெனக்கெட்டு தனக்காக வந்து வழி காட்டிய இளைஞரை நடிகர் மம்முட்டி கட்டி பிடித்து நன்றி தெரிவித்திருக்கிறார். தனக்கு வழிக்காட்டியவர் பெயர் பாண்டியன் என்றும்.. அவர் தனது நண்பன் என்றும் மம்முட்டி பேசிய வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
மலையாள படங்களில் தமிழர்கள் வில்லன்களாக சித்தரிக்கப்படுவது காலங்காலமாக நடக்கும் விஷயம்தான். ஆனால், இன்று ஒட்டுமொத்த மலையாள சினிமாவையே தமிழர்தான் காப்பாற்றியிருக்கிறார். ஊர் பெயர் தெரியாத பண்டியனின் உதவிக்கு ஒட்டுமொத்த மலையாள சினிமாவும் கடன்பட்டிருக்கிறது. இனியாவது மலையாள சினிமாக்களில் தமிழர்கள் கவுரவமாக சித்தரிக்கப்படுவார்களா? என்கிற பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.