’நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி’ – பட்டியலின மக்களின் கிராமத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து!

Spread the love

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள அண்ணா நகர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பட்டியலினக் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் படிப்பு மற்றும் வேலைகளுக்குச் செல்ல அரசுப் பேருந்தையே பயன்படுத்துகிறார்கள். ஆனால், அண்ணா நகரில் இருந்து மிகச் சில பேருந்துகளே இயக்கப்படும் நிலையில், பக்கத்திலுள்ள கெம்பனூர் கிராமத்தில் இருந்து சீரான இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கெம்பனூர் பகுதிக்கு அதிகமாக இயக்கப்படும் ’21’ என்ற எண் கொண்ட பேருந்தை அண்ணா நகர் வரை நீட்டிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், ”இவங்க எல்லா உட்கார்ந்து வரும்போது, நாங்க நின்னுட்டு வரணுமா?” என்ற ஆதிக்கசாதியினரின் எதிர்ப்பால், அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கடந்த அ.தி.மு.க, தி.மு.க. ஆட்சிகளில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக, மற்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அண்ணா நகருக்கு திருப்பி விடப்பட்டது. ஆனாலும் ’21’ என்ற பேருந்து மட்டும் அண்ணா நகர் பகுதிக்கு நீட்டிக்கப்படாமல் இருந்தது.

அண்ணா நகருக்கு இயக்கப்பட்ட பேருந்து
அண்ணா நகருக்கு இயக்கப்பட்ட பேருந்து

இவ்விவகாரம் தொடர்பாக அண்மையில் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, “பேருந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து இன்று மதியம் முதல் ‘21’ என்ற பேருந்து அண்ணா நகரில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணியளவில் கெம்பனூர் வந்த அப்பேருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அண்ணா நகர் இயக்கப்பட்டது. பின்னர் பயணிகளுடன் அங்கிருந்து கிளம்பி சென்றது. இது அக்கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அண்ணா நகரை சேர்ந்த ஜெயக்குமார் கூறுகையில், “கெம்பனூர் வரை இயங்கி வந்த 21 எண் பேருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள அண்ணா நகர் வரை இயக்க வேண்டும் என்பது எங்களின் 15 ஆண்டு கனவு. அது மாற்று சாதியினர் எதிர்ப்பால் நிறைவேறாமல் இருந்தது. பேருந்து என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் சாதிய அடையாளம் வைத்து ஒரு பேருந்தை அவர்கள் சொந்தம் கொண்டாடியதோடு, எங்களது பகுதிக்கு வர விடாமல் தடுத்தது நவீன தீண்டாமையாக இருந்தது. பேருந்து எங்கள் பகுதிக்கு வருவதற்கான சாதிய தடையை அமைச்சர் வன்னிஅரசு உடைத்து, பேருந்து வர நடவடிக்கை எடுத்துள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த பேருந்து எந்த தடையுமின்றி அண்ணா நகரில் இருந்து இயக்க வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *