India
oi-Vigneshkumar
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இப்போது மிகப் பெரிய ஒரு அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. மம்தா பானர்ஜிக்கு நாளுக்கு நாள் அடி மேல் அடி விழுந்து வருகிறது. இதற்கிடையே மம்தாவுக்கு இன்னொரு அதிர்ச்சியாக அதிருப்தியாளர்கள் ஆதரவு எம்பிக்கள் எண்ணிக்கை 20ல் இருந்து 22ஆக உயர்ந்துள்ளது. இது வங்கத்து அரசியலைப் புரட்டிப் போடுவதாக இருக்கிறது.
மேற்கு வங்க அரசியலில் மம்தா பானர்ஜிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் முக்கிய தலைவர்களின் வெளியேற்றம் மம்தாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானர்ஜிக்கு எதிராக அவரது கட்சியிலேயே ஒரு பெரிய அதிருப்தி குழு உருவாகியுள்ளது. கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, மம்தாவின் பிடி கட்சிக்குள் தளர்ந்து வருவதாகத் தெரிகிறது.

22 எம்பிக்கள் ஆதரவு
மம்தா பானர்ஜியின் நீண்டகால நம்பிக்கைக்குரியவராக இருந்த எம்.பி. காகோலி கோஷ் தஸ்திதார் தான் தற்போது இந்த அதிருப்தி குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். ஆரம்பத்தில் 20 எம்பிக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறிய காகோலி, தற்போது அந்த எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். “கட்சிக்குள் சர்வாதிகாரம் இருக்காது.. அனைவரின் கருத்துகளும் கேட்கப்படும்” என்று அவர் மம்தாவை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ்
இந்த விவகாரத்தில் பாஜகவின் தலையீடும் இருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால், அதிருப்தி குழுவைச் சேர்ந்த நான்கு முக்கிய எம்பிக்கள் (சதாப்தி ராய், மாலா ராய், பிரசூன் பானர்ஜி மற்றும் சயோனி கோஷ்) டெல்லியில் பாஜக மூத்த தலைவர் பூபேந்தர் யாதவை சந்தித்துப் பேசியுள்ளனர். அதேபோல திரிணாமுல் காங்கிரஸின் மிக மூத்த தலைவரான சுதீப் பந்தோபாத்யாய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், அவர் அதிருப்தி குழுவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
குழப்பம்
அதேநேரம் அதிருப்தி குழுவிற்குள் ஒரு சிறிய குழப்பமும் நிலவுகிறது. காகோலி கோஷ் தஸ்திதாரின் தலைமையின் கீழ் செயல்பட சில எம்பிக்கள் தயக்கம் காட்டுகின்றனர். காகோலி கோஷுக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த சுதீப் பந்தோபாத்யாய் தலைமை ஏற்க ரெடி என்கிறார்கள். அது தங்களுக்கு அதிக பலத்தைத் தரும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம் மம்தாவுக்கு சிக்கல் எம்பிக்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸின் 80 எம்எல்ஏக்களில், சுமார் 60 பேர் ஏற்கனவே அதிருப்தி குழுவில் இணைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மானஸ் பூனியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது மம்தாவுக்கு விழுந்த மற்றொரு பலத்த அடியாகும்.
நாளை க்ளைமேக்ஸ்
திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பிரிந்து தங்களை ஒரு தனிக் குழுவாக அங்கீகரிக்க வேண்டும் என்று அதிருப்தி எம்பிக்கள் மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இது தொடர்பாக நாளை சபாநாயகரை அவர்கள் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உடையுமா அல்லது மம்தா பானர்ஜி தனது பலத்தை மீண்டும் நிரூபிப்பாரா என்பது தெரியவரும். மொத்தத்தில் மம்தாவின் அரசியல் வாழ்க்கையில் இது ஒரு கடினமான காலகட்டமாகவே பார்க்கப்படுகிறது.