ஏதேனும் ஒரு தூணை அல்லது ஒரு துகளைக் காட்டி இதில் பகவான் விஷ்ணு இருக்கிறானா என்று அசுரன் கேட்டால் அதற்கு பிரகலாதனும் ‘ஆம்’ என்று சொல்லிவிடுவான் என்பதை பகவான் அறிவார். அதனால் இந்த உலகின் அனைத்துத் துகள்களிலும் அந்தக் கணத்தில் பிரசன்னமாகியிருந்தார் என்கின்றன ஞான நூல்கள்.
இரண்யனோ ஒரு தூணைக்காட்டி,‘இந்தத் தூணில் உன் ஹரி இருக்கிறானா…’ என்று கேட்டான். பிரகலாதனும் ‘ஆம்’ என்று சொன்னான். அந்தத் தூண் அரண்மனையில் தான் அறியக் கட்டிய தூண் என்பதால் அதில் அந்த ஹரி இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து இரண்ய கசிபு அந்தத் தூணை உடைத்தான். அப்போது அண்ட சராசரங்களும் கிடுகிடுங்க பகவான் விஷ்ணு நரசிம்மமாய் வெளிப்பட்டு அவனை வதம் செய்தார். இவ்வாறு பக்தனின் வாக்கைப் பரிபாலனம் செய்வதற்காக பகவான் விஷ்ணு புரிந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். எனவே நரசிம்மரை எண்ணி வணங்கினால் அந்தக் கணத்தில் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை.