ஏற்காட்டில் உள்ள குண்டூர் என்னும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் மணிமேகலை தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் நிவேதா.
இவர் இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 245 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் மருத்துவப் படிப்பிற்காகக் கலந்தாய்விற்கும் விண்ணப்பித்துள்ளார்.
குண்டூர் கிராமத்தில் முதல் மருத்துவ மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளதால் கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து நிவேதாவிடம் கேட்கையில், “எனது தந்தையும் தாயும் இருவரும் தினக்கூலியாகவே உள்ளனர். ஒரு நாள் வருமானமே ₹400 ரூபாய்தான் என்பதால் அரசுக் கல்லூரியில் சீட்டு கிடைக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கையும் வைத்துள்ளோம்.
எனது பயணம் மிகவும் கடினமாகவே இருந்துள்ளது. நான் 12-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில்தான் படித்துள்ளேன்.
பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை இந்தக் கிராமத்தில் மின்சார வசதியே இல்லை. கடந்த இரண்டு மாதங்களாகத்தான் எனது கிராமத்திற்கு பேருந்து வசதி கிடைத்துள்ளது.
இப்போது வரை இங்கு தொலைபேசி சிக்னல் சுத்தமாகக் கிடையாது. மேலும், நான் நீட் பயிற்சிக்காக தினமும் மலை இறங்கி 30 கிலோமீட்டர் பயணம் செய்துதான் பயிற்சி எடுத்து வந்துள்ளேன்.
எனக்கு யூனிட்டி ஆஃப் யூத் என்ற அமைப்பும், அதன் தலைவரான விஜய் என்பவரும் உதவிகள் செய்துள்ளார்கள். எனது கிராமத்தில் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே எனது கனவும் லட்சியம்” என்று கூறியுள்ளார்.
அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு மலைவாழ் கிராமத்திலிருந்து வெளியே வந்து தனது அடையாளத்தைப் பதிவு செய்துள்ள இவரைப் பொதுமக்களும் தன்னார்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.