அதிக வீரியமுள்ள அலோபதி மருந்துகளை எடுக்கும்போது மட்டுமே மருந்துகளுக்கிடையேயான பக்க விளைவுகள் (Drug Interaction) ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், நீங்கள் தற்போது எடுத்துவரும் சாதாரண மருந்துகளோடு திரிபலா சூரணத்தை எடுப்பது பாதுகாப்பானதுதான்.
தற்போது அலோபதி சிகிச்சை பெற்று வந்தாலும், அதனுடன் ஒருங்கிணைந்த முறையில் சித்த மருத்துவரையும் அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. சித்த மருந்துகளையும் சேர்த்து எடுக்கும்போது நோயின் அறிகுறிகளில் இருந்து சீக்கிரமாக நிவாரணம் பெற வாய்ப்புள்ளது.

மற்றபடி, திரிபலா சூரணம் அல்லது குறிப்பிடப்பட்டுள்ள மூலிகை மருந்துகளை உட்கொள்வதால் எந்தப் பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை. எனினும், எந்த மாதிரியான மருந்துகளை எந்த அளவில் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலோடு தெளிவுபடுத்திக் கொண்டு உட்கொண்டால் எவ்விதச் சிக்கலும் இருக்காது.
அடுத்தவர்கள் பயன்படுத்துகிறார்கள், வாட்ஸ்அப் ஃபார்வேர்டில் வந்தது என்பதையெல்லாம் நம்பி, எந்த மருந்தையும் சுயமாக எடுப்பது எப்போதும் யாருக்கும் ஆபத்தானதுதான். மலச்சிக்கலுக்கான மருந்து எடுப்பதைவிடவும், முக்கியமானது அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வது. எனவே, முதலில் அதை கவனியுங்கள்.
டாக்டர் விக்ரம்குமார்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில் சித்த மருத்துவராகப் பணிபுரிபவர். சித்த மருத்துவத் துறையில் 16 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.