International
oi-Prasanna Venkatesh
அமெரிக்காவும் ஈரானும் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்துள்ளது புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன. ஈரான் உடனான இந்த அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இஸ்ரேல் பிரதமர் மிகப்பெரிய முட்டுக்கட்டையாகவும் தலைவலியாகவும் இருந்தார் என்பதை டிரம்ப் பகிரங்கமாக உடைத்துள்ளார்.

டிரம்பின் கடுமையான வார்த்தைகள்
ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ (The New York Times) நாளிதழுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பிரத்யேக நேர்காணலை வழங்கினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை “மிகவும் கடினமான நபர்” என்று விவரித்துள்ளார். லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அமெரிக்கா – ஈரான் இடையேயான இறுதி ஒப்பந்தத்தை கிட்டத்தட்ட கெடுத்துவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
சொல்லப்போனால் ஈரானிடம் இருந்து இஸ்ரேலை காப்பாற்றியதற்காக நெதன்யாகு அமெரிக்காவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏன் நெதன்யாகுவுக்கு நன்றி சொல்ல வேண்டும்
ஒருவேளை ஈரான் அணு ஆயுதம் வைத்திருந்தால், இஸ்ரேல் இரண்டு மணி நேரத்திற்குள் இல்லாமல் போயிருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டால் இஸ்ரேல் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதனால் நெதன்யாகு நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த கருத்து, அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் – பெஞ்சமின் நெதன்யாகு மத்தியிலான உறவு இதன் மூலம் உடைந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஈரான் போரில் ஆரம்பக்கட்டத்தில் அமெரிக்காவுக்கு பெரும் உதவி செய்தது இஸ்ரேல் தான், ஆனால் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா திட்டமிட்ட போது லெபனான் மற்றும் பிற ஈரான ஆதரவு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி போரை நீட்டிப்பு செய்தது இஸ்ரேல் தான்.
ஈரான் மீதான தாக்குதல்களின் தாக்கம்
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்கள் தான் ஈரானை அமைதி ஒப்பந்தத்திற்கு இணங்க வைத்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மூன்றாவது தாக்குதலை விரும்பவில்லை என்றும், அந்நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். இந்த தாக்குதல்கள் ஒப்பந்தம் உருவாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் குறித்த இறுதி உடன்படிக்கையை எட்டுவதில் ஈரான் ஏதேனும் தவறுகளை இழைத்தால், அவர்கள் மீதான ராணுவத் தாக்குதல்கள் மீண்டும் உடனடியாகத் தொடங்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமைதி ஒப்பந்தத்தை பாதுகாக்கும் ஆலோசனை
அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னாள் தலைவரும், டிரம்ப் நிர்வாகத்தின் முன்னாள் முக்கிய ஆலோசகருமான ஜோ கென்ட் (Joe Kent), அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளார்.
ஆனால், இந்த ஒப்பந்தம் நீண்டகாலம் நிலைநிறுத்தப்பட வேண்டுமானால், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ராணுவ மற்றும் உளவுத்துறை உதவிகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை முறியடிக்க தொடர்ந்து முயற்சிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதேபோல் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ராணுவ மற்றும் நிதி ஆதரவுகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று ஜோ கென்ட் வால் ஸ்ட்ரீட் மற்றும் வாஷிங்டன் நிர்வாகத்திற்கு ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இந்த அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், மத்திய கிழக்கு பகுதியில் நீண்டகால அமைதி ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இஸ்ரேலின் நிலைப்பாடு காரணமாக அமெரிக்கா புதிய அரசியல் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.


