International
oi-Shyamsundar I
காத்மாண்டு: நேபாளம் மற்றும் சீனா இடையேயான திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் திடீர் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இக்கோரத் துயரத்திற்கு இடையே, வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு உயிரிழந்த பெண்களின் சடலத்திலிருந்து தங்கக் கம்மல்களைத் திருடிய இரண்டு நபர்களை நேபாளப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மனிதாபிமானமற்ற இந்தச் செயலின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வைரலான 41 வினாடி வீடியோ – அதிர்ச்சிப் பின்னணி
நேபாளத்தின் நாராயணி மற்றும் போதேகோசி ஆற்றுப் படுகைகளில் வெள்ளத்தில் அடித்து வரப்படும் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது ஆற்றில் மிதந்து கரை ஒதுங்கிய ஒரு பெண்ணின் சடலத்தை, இரண்டு நபர்கள் மரக்கட்டைகள் மற்றும் அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து கரைக்குக் கொண்டு வந்தனர்.
அப்போது உடலை மீட்டெடுப்பதற்குப் பதிலாக, சடலத்தின் இரு காதுகளிலும் இருந்த தங்கக் கம்மல்களை அந்த நபர்கள் கழற்றித் திருடி எடுத்துச் சென்றனர். இதனைச் சுற்றி நின்ற சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த 41 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, நேபாளக் காவல்துறை உடனடியாக விசாரணையில் இறங்கியது.
இருவர் அதிரடி கைது:
வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய சித்வான் மாவட்ட போலீஸார், நவால்பராசியைச் சேர்ந்த 25 வயதான மதன் குருங் மற்றும் சுன்சாரி மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான உமேஷ் சவுத்ரி ஆகிய இருவரைக் கண்டறிந்தனர். பாரத்பூர் பெருநகர பகுதி-1ல் உள்ள பொக்காரா பேருந்து நிலையம் அருகே அவர்கள் பதுங்கியிருந்தபோது போலீஸார் இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாகப் பேசிய சித்வான் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராமேஸ்வர் பவுடேல், “பேரிடர் காலங்களில் உயிரிழந்தவர்களின் உடல்களையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களையோ குறிவைத்து நடத்தப்படும் கொள்ளை மற்றும் மனிதாபிமானமற்ற எந்தச் செயலும் மன்னிக்கப்படாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
நேபாள – திபெத் எல்லைப் பெருவெள்ளம்
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை உடைப்பு காரணமாக போதேகோசி, திரிசூலி மற்றும் நாராயணி ஆறுகளில் பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் சேற்றுச் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நீர்மின் திட்டங்கள், பாலங்கள், சாலைகள் மற்றும் குடியிருப்புகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 392 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் 910 பேர் மற்றும் திபெத் பகுதியில் 558 பேர் என மொத்தம் 1,468 பேர் மாயமாகியுள்ளனர். இதில் 290 இந்தியர்களும் அடங்குவர்.
ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சேற்றில் இறங்கித் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திரிசூலி நீர்மின் திட்டப் பகுதியில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த 21 தொழிலாளர்கள் உள்பட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இயற்கைப் பேரிடரால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் உறவுகளை இழந்து தவித்து வரும் வேளையில், சடலத்திலிருந்து நகையைத் திருடிய இந்தச் சம்பவம் நேபாளத்தில் பெரும் சோகத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.