காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “நொய்டாவில் ஒரு தொழிலாளியின் சராசரி ஊதியம் ரூ.12,000. ஆனால் வீட்டு வாடகை ரூ.4,000 முதல் ரூ.7,000 வரை உள்ளது. ஆண்டுக்கு ரூ.300 ஊதிய உயர்வு கிடைப்பதற்குள் வீட்டு வாடகை ரூ.500 உயர்ந்துவிடுகிறது. இதுதான் ‘வளர்ச்சியடைந்த இந்தியாவின்’ உண்மை நிலையா?” எனக் கேள்வி எழுப்பினார்.
போராட்டத்தைத் தொடர்ந்து, திறமையற்ற, அரை-திறன் கொண்ட மற்றும் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை இடைக்காலமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திறமையற்ற தொழிலாளர்களுக்கு ரூ.13,690, அரை-திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ரூ.15,059, திறன் கொண்ட ஊழியர்களுக்கு ரூ.16,868 என ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.20,000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் மே-ஜூன் மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலும், 2027-ல் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளன. பா.ஜ.க-வின் கோட்டையாகக் கருதப்படும் இம்மாநிலத்தில், தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு புதிய அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. எனவே, அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர தொழில்துறையினருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொழில்முனைவோருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே களத்தை தயார் செய்துகொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள்.